மண்ணென்னையை தொழுவத்தின் கூரை மீது கொட்டி, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, தீப்பெட்டியை எடுத்து, நிதானமாய்ப் பற்ற வைத்து, அந்தத் தீக்குச்சியை கூரை மீது அழகாய் வீசினான் மனோகரன்.
“ச்சே” என்று தன்னையும் மீறிக் கத்தி விட்டான்.
“என்ன்ங்க?...எதைப் பார்த்து இப்படி கோபப்படறீங்க?” என்று கேட்டவாறே அவன் மறுக்க மறுக்க, அவன் கையிலிருந்த மொபைலைப் பிடுங்கி அந்த வீடியோவைத் தானும் பார்த்தாள் சரஸ்வதி.
பார்க்கப் பார்க்க அவள் முகத்தில் கோபக்கனல் கொழுந்து விட்டு எரிந்தது.
“ச்சீய்....நீயெல்லாம் ஒரு மனுஷனாய்யா?...உனக்கு என்ன வக்கிரப் புத்தியிருந்தா உன் வீட்டு மாட்டுத் தொழுவத்துக்கு நீயே நெருப்பு வெச்சிருப்பே?” வார்த்தைக் கங்குகளைக் கொட்டினாள் சரஸ்வதி.
அந்தச் சமயத்தில், அவள் கையிலிருந்த மனோகரனின் மொபைலுக்குக் கால் வர, அதை அவளே அட்டெண்ட் செய்தாள்.
“என்ன மனோகரா...அன்னம்மாவைக் கெடுத்து...அவளை நீ கர்ப்பமாக்கிய விஷயத்தை உன் சம்சாரத்து கிட்டே சொல்லிடலாமா?...” இணைப்பு கட்டானது.
அதுவரையும் புகை விட்டுக் கொண்டிருந்த சரஸ்வதி என்னும் எரிமலை வெடித்துச் சிதற ஆரம்பித்தது. “அடப்பாவி மனுஷா...அந்த சின்ன சாதிக்காரியைக் கூட விட்டு வைக்கலையா நீ?...உன் பசிக்கு அவளை இரையாக்கிட்டு..அந்த தப்பை மறைக்க மாட்டுத் தொழுவத்துக்கே தீ வெச்சிருக்கே?...இப்பத்தான் புரியுது...உன்னோட சுயரூபம் தெரிஞ்சுதான் உன் தங்கச்சி தப்பிச்சுப் போயிட்டா!... ஹும்...அவ போயிட்டா....நான் எங்கே போவேன்?...நீ கொலைகாரன் ஆனாலும்...கொள்ளைக்காரன் ஆனாலும் உன் கூடத்தானே குப்பை கொட்டியாகணும்” கத்தி விட்டு பெருங் குரலில் அழ ஆரம்பித்தாள் சரஸ்வதி.
மறுபடியும் மனோகரனின் மொபைலுக்கு கால் வந்தது. மனைவியிடமிருந்து அதை வாங்கித் தானே பேச எண்ணி மனோகரன் கையை நீட்ட, “நானே பேசறேன்” என்று சொல்லி, இணைப்பிற்குள் புகுந்து, “ஹலோ” என்றாள்.
“ஓ...இப்ப பேசறது மனோகரனோட மனைவி சரஸ்வதியா?”
“ஆமாம்!...நீங்க யாரு?”
“நான் யார்?ங்கறது இப்ப முக்கியமில்லை!...உங்க புருஷன் செஞ்சிருக்கற காரியத்தைப் பார்த்தீங்களா?...கீழ்சாதிக்காரியைக் கெடுத்துக் கொலையும் பண்ணியிருக்கார்...அதுக்கான ஆதாரமும் இருக்கு!...நான் இதைக் கொண்டு போய் போலீஸில் குடுத்தா...நிச்சயம் உன் புருஷனுக்குத் தூக்குதான்!...என்ன?...போலீஸ்ல குடுத்துடலாமா?”