சுவற்றில் என்னென்ன இருக்கின்றதென்று!” என்றார்.
நம்பூதிரியின் கண்டுபிடிப்பு ஒருவேளை உண்மையாகும் பட்சத்தில் பல குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்கிற எண்ணத்தில்
“ஓ.கே!..மிஸ்டர் சாம்பசிவம்!...நான் கிளம்பறேன்!” என்றபடி நகர்ந்த ஏ.சி. சிறிது தூரம் சென்றதும் திரும்பி நின்று நம்பூதிரியைப் பார்த்து “அய்யா நம்பூதிரி அவர்களே..வரட்டுமா?” என்று குறுஞ்சிரிப்புடன் கூறிவிட்டுச் சென்றார்
****
இரவு முழுவதும் உறங்காமலே கிடந்த சாம்பசிவம் மறுநாள் விடிந்தும் விடியாத அதிகாலை நேரத்திலேயே தன் காம்ப்ளக்ஸிற்கு விரைந்தார்.
அவரது உள் மனம் “ஆண்டவா!..நம்பூதிரிக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது!...”என்று தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தது.
தன் அலுவலக அறையின் வாசலில் இருந்த சோபாவில் சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்த நம்பூதிரியை பார்த்ததும்தான் அவருக்கு மூச்சே வந்தது.
“அப்பாடா...”
“வணக்கம் ஸ்வாமி!” மிகவும் பவ்யமாகச் சொன்னார்.
“என்ன சாம்பசிவம் அய்யா..இரவு முழுவதும் உறங்காமலே கிடந்தீரோ?”
ஆச்சரியமானார் சாம்பசிவம் “இவருக்கு எப்படித் தெரியும்?”
“அது...வந்து...ஆமாம் சாமி!” திணறினார்.
“அழிவின் கதைகள் இயற்கைக்கு
அழகாய் எழுதும் மானிடமே!
பழியின் கணக்கு நீண்டுவிடின்
பலியின் கணக்கு முயர்ந்திடுமே!
செழிவின் கழிவு அச்சுறுத்த
செத்துப் பிழைக்கும் வழக்குதான்
அழிவின்றிருப்பார் தவம்புரிந்தே
அவர்தம் வரமே அவலமெல்லாம்!”
“சாமி...நீங்க சொல்றது எதுவுமே புரியலையே சாமி!”
“கவலையே படாதீர்கள்!...எல்லாவற்றையும் கண்டு பிடித்து விட்டேன்!...பிரச்சினையின் மூலத்தையே தோண்டி எடுத்து விட்டேன்...ப்ச்...கடந்த காலத்தில்...அதாவது இந்தக் கட்டிட நிர்மாணப் பணியின் போதே...இங்கு நிறைய தவறுகள் நடந்தேறியுள்ளன!”
“அய்யா...என்ன சொல்றீங்க?” பயந்தார் சாம்பசிவம்.