தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 24 - முகில் தினகரன்
அன்று காலை ஒன்பது மணியிருக்கும். காலை நேரக் கூட்டம் குறைந்ததும், அம்மனுக்கு உச்சி காலப் பூஜைக்கான அலங்காரம் செய்ய திரைச் சீலையை இழுத்து விட்டு கர்ப்பக்கிரகத்திற்குள் புகுந்த சுதாகர்ஜி, கோவிலுக்கு எதிரே ஒரு வாகனம் வந்து நிற்கும் ஓசை கேட்க, வெளியே வந்தார்.
“பளீர்” வெண்மை நிறத்தில் வந்து நின்ற அந்தக் காரிலிருந்து இறங்கி அந்த மனிதர், சஃபாரி ஆடையில் கம்பீரமாயிருந்தார். ஆறடிக்கும் மேலான உயரத்தில், அகலமான தோள்களோடு நின்ற அவரைத் தொடர்ந்து காரிலிருந்து இறங்கினாள் அந்தப் பட்டுப்புடவைப் பெண்மணி.
கழுத்தில் இதற்கு மேல் நகைகள் போட முடியாது என்கிற நிலை. கையில் கெட்டி கெட்டியாய் வளையல்கள். முகம் அலங்காரப் பூச்சில் மின்னியது. உயரமான கணவருக்கு ஏற்ற ஜோடியாய் அவளும் அதீத உயரமாயிருந்தாள்.
முகத்தில் கேள்விக்குறியைச் சுமந்து கொண்டு அவர்களை சுதாகர்ஜி பார்க்க, அவர்கள் தங்கள் காலணிகளை கோவிலுக்கு வெளியே கழற்றி விட்டு விட்டு உள்ளே வந்தனர்.
சுதாகர்ஜியின் கைகள அவரையுமறியால் அவர்களுக்கு “வணக்கம்” சொல்லியது. பதிலுக்கு வணக்கம் சொன்ன அந்த சஃபாரி மனிதர், “என் பெயர் சஞ்சீவ் குமாரசாமி, உடுமலைப்பேட்டை சஞ்சீவ் ஸ்பின்னிங் மில்ஸ்...எம்.டி.” என்றார்.
“வாங்க சார்...மொதல்ல சாமி கும்பிட்டுட்டு அப்புறமா பேசுவோம்” என்றார் சுதாகர்ஜி.
“தாராளமா” என்ற அந்த சஞ்சீவ் குமாரசாமி சன்னதிக்கு எதிரே சென்று நிற்க, அவர் மனைவியும் உடன் நின்றாள்.
திரைச் சீலையை விலக்கி அவர்களுக்காக தீபாராதனை காட்டினார் சுதாகர்ஜி.
பக்தியுடன் கண்களை மூடி வழிபட்டவர்கள், சுதாகர்ஜி கொடுத்த குங்குமத்தைப் பெற்றுக் கொண்டு சன்னதியை வலம் வரச் சென்றனர்.
அவர்கள் வருகைக்காக காத்திருந்த சுதாகர்ஜி, அவர்கள் வந்ததும் இரண்டு சேர்களைக் காட்டி அவர்களை அமரச் சொன்னார். “ம்...சொல்லுங்க சார்” என்றார்.
“எனக்கு உடுமலைப்பேட்டையில் இருப்பது போல், ராஜபாளையம், அருப்புக்கோட்டை போன்ற ஊர்களிலும் ஸ்பின்னிங் இருக்கு!...ஒவ்வொரு வருஷமும் கோடிக்கணக்குல லாபம் பார்க்கறேன்!...எங்களுக்கு ஒரே மகள்...பேரு...சம்யுக்தா....போன வருஷம் நடந்த ஒரு விபத்துல அவ மனநிலை பாதிக்கப்பட்டுட்டா...” சொல்லி விட்டு அவர் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“விபத்துல்ன்னா?...சாலை விபத்தா சார்” சுதாகர்ஜி கேட்டார்.
“இல்லை இது போதை விபத்து” என்றார் சஞ்சீவ் குமாரசாமி.