தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 04 - முகில் தினகரன்
அங்கிருந்து திரும்பி வரும் வழியில் சாலையோரமிருந்த ஒரு இளநீர்க் கடையில் பைக்கை நிறுத்தினான் தனசேகர்.
“ஏன் சேகர் வண்டியை நிறுத்திட்டே?” முரளி கேட்க,
“ஆளுக்கொரு இளநீர் சாப்பிட்டுட்டுப் போவோமே?” என்றான் தனசேகர்.
“எனக்கு வேண்டாம்...நீ வேணா சாப்பிடு” என்றான் முரளி. அவன் முகம் இறுக்கமாயிருந்தது.
“டேய்...இளநீர் குடிக்கறதுக்கென்ன?” என்று முரளியிடம் சொல்லிய தனசேகர், கடைக்காரனிடம், “ரெண்டு இளநீர் வெட்டுப்பா” என்றான்.
அவன் வெட்டிக் கொடுத்த இளநீரை வாங்கிப் பருகும் போது தனசேகர், “என்னை மன்னிச்சிடுடா முரளி!...என்னாலதான் உனக்கு இந்த அவமானம்!...போகும் போதே நீ “வேண்டாம்...நான் வரலை...அது முறையல்ல?”ன்னு சொன்னே...நான்தான் கேட்கலை!” மிகவும் வருத்தப்பட்டான்.
“பரவாயில்லை விடுடா!” என்ற முரளி, “இன்னிக்கு நடந்த இந்த விஷயத்தைப் பார்க்கும் போது...நீ ஆசைப்பட்ட மாதிரி...நான் உன்னோட கல்யாணத்துல முழு ஈடுபாட்டோட வேலை வெட்டி செய்ய முடியாது போலிருக்கே!...” என்றான்.
“அடப் போடா....அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?...நீ மாப்பிள்ளை வீட்டுக்காரன்!...அதிலும் மாப்பிள்ளைத் தோழன்” என்று தனசேகர் சொல்ல,
“அய்யய்ய...அந்த இடத்துக்கெல்லாம் நான் வர முடியாது சாமி!...அதுக்குன்னு உங்க சொந்தத்துல உரிமை உள்ளவங்கதான் இருப்பாங்க!...அந்த உரிமையை அவங்க விட்டுக் கொடுக்க மாட்டாங்க!...வெட்டுக்குத்து வரைக்கும் போயிடுவாங்க!.” என்றான் முரளி.
“த பாரு முரளி!...என்னைப் பொருத்த வரையில்...நிஜ வாழ்க்கையில் இந்த மாப்பிள்ளைக்கு சின்ன வயசிலிருந்தே தோழனாய் இருந்தவன் நீதான்!...அதனால...நீதான் அங்கேயும் மாப்பிள்ளைத் தோழன்!...” உறுதிபடச் சொன்னான் தனசேகர்.
“டேய்...டேய்...சேகர்!...வேண்டாம்டா...அதையும் இதையும் பேசி...வீணா..பிரச்சினை பண்ணாதடா!..கல்யாணம் முடியற வ்ரைக்கும் நாம ரெண்டு பேருமே கொஞ்சம் விலகியே இருப்போம்டா.” கெஞ்சினான் முரளி.
மெலிதாய்ச் சிரித்த தனசேகர், “என்னது?...நாம ரெண்டு பேரும் விலகி இருக்கறதா?...முரளிக் கண்ணா...எனக்கு இந்தக் கல்யாணம் முக்கியமில்லை!....நீதான் முக்கியம்!...நான் உனக்கு முக்கியத்துவம் குடுக்கிறேன் என்கிற காரணத்தால் இந்தக் கல்யாணமே நின்னு போனாலும் அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்!...” என்று சொல்ல,
அவன் வாயைப் பொத்தினான் முரளி, “ச்சீய்...என்ன பேச்சு இது?...எதுக்கு கல்யாணம்