தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 09 - முகில் தினகரன்
கோயமுத்தூர்.
அந்த ஊருக்கு இயற்கை அளித்த கொடையான இதமான சீதோஷ்ணம் அவர்களை கை நீட்டி வரவேற்றது.
பரபரப்பான நகரமாய் இருந்த போதும், இங்கிதமான மக்களின் இங்கிதமான பழக்க வழக்கங்களால், இனிமை நகரமாய் இருந்தது கோவை.
ஒரு ஆட்டோ பிடித்து அந்த கே.பி.எஸ்.டிரான்ஸ்போர்ட் ஆபீஸிற்கு சென்றதும், வாசலிலிருந்த செக்யூரிட்டியிடம், “அண்ணே...இங்கே “தங்கவேலு”ன்னு ஒரு டிரைவர்?” முரளி கேட்டான்.
“தங்கவேலுவா?...நேத்திக்குத்தான் மைசூர் டிரிப் முடிச்சிட்டு வந்தார்!...அநேகமா...காலை நேரத்துல ஓய்வெடுத்திட்டு மதிய வாக்கில்தான் இங்க வருவாரு!...ஏன்?...என்ன வேணும் உங்களுக்கு?” அந்த செக்யூரிட்டி கேட்க,
“அவரு கிட்டப் பேசணுமே?” என்றான் முரளி.
“வேணா அவரோட மொபைல் நெம்பர் தர்றேன்...பேசிக்கறியா?”
“வந்து...என்கிட்ட மொபைல் இல்லையே?” பரிதாபமாகச் சொன்னான் முரளி.
“என்னது?...மொபைல் இல்லையா?...என்னய்யா ஆளு நீ?...இந்தக் காலத்துல நாய் நரியெல்லாம் கூட மொபைல் வெச்சுக்கிட்டு சுத்துது...உன் கிட்ட மொபைல் இல்லையா?...வித்தியாசமான ஆளாயிருக்கியே?...கிராமத்துப் பக்கமா?” நக்கலாய்க் கேட்டான் அந்த செக்யூரிட்டி.
“ஆமாங்க அய்யா...நான் கிராமத்திலிருந்துதான் வர்றேன்!...அங்கெல்லாம் மொபைல் இன்னும் சரியான புழக்கத்துக்கு வரலை!” என்றான் முரளி.
“சரி...இந்தா என் மொபைலிலேயே பேசு” என்ற செக்யூரிட்டி டிரைவர் தங்கவேலுவின் எண்ணை டயல் செய்து கொடுத்தார்.
“இந்தாப்பா...ரிங் போகுது!...பேசு” போனை வாங்கிய முரளி அதை எப்படிக் காதில வைத்துப் பேசுவதென்றே தெரியாமல் விழிக்க, “இப்படிப் பிடிச்சுப் பேசுப்பா” என்றபடி சரியாக காதில் வைத்துக் கொடுத்தான் செக்யூரிட்டி.
மறுமுனையில், “அன்னமிட்ட கை!...நம்மை ஆக்கி விட்ட கை!...உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழ வைத்து!...அன்னமிட்ட கை” என்ற பாடல் இசைக்க,
“அண்ணே...பாட்டுப் பாடுதுண்ணே” என்று சொல்லி முரளி மொபைலைத் திருப்பிக் கொடுக்க, “எம்.ஜி.ஆர்.பாட்டுக் கேட்குதா?.....அதுதான்பா ரிங் டோன்!...காதிலேயே வைப்பா...அவர் பேசுவார்” என்றார் செக்யூரிட்டி.
முரளி மொபைலை மீண்டும் காதில் வைக்க, எதிர் முனையில் தங்கவேலு, “அலோ...அலோ”என்று கத்திக் கொண்டிருந்தார்.