தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 22 - முகில் தினகரன்
அரை போதையில் காரை வெகு நிதானமாக ஓட்டி வந்து “விஸ்வா டவர்” ஸை என்.ஆர்.ஐ.சுப்ரமணியராஜா அடையும் போது
நேரம் சரியாக 12.45.
காரை சற்றுத் தள்ளி ஒரு மரத்தினடியில் நிறுத்தி விட்டு, சிங்கப்பூரில் தான் வாங்கி வைத்திருந்த அந்த விலையுயர்ந்த காமிராவை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு கையில் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு, காம்ப்ளக்ஸின் மெயின் ஷட்டரை நோக்கி நடந்தார். கால்களில் லேசான தள்ளாட்டமிருந்தது.
சுற்றும் முற்றும் ஒரு பார்வை பர்த்து விட்டு, ஷட்டரின் லாக்கைத் திறந்து உள்ளே நுழைந்து மீண்டும் ஷட்டரை முன்பிருந்தது போலவே மூடினார்.
நிதானமாய்த் திரும்பி டார்ச் ஒளி காட்டிய வழியில் மெல்ல மெல்ல நடந்து சென்று படிக்கட்டை அடைந்தார்.
நேரம் 1.00.
படிக்கட்டில் ஏறத் துவங்கியவர் மூன்றாவது தளத்தை அடைந்ததும் எல்லாப் பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்து விட்டு “ஹூம்!...என்னமோ...இந்த தேர்ட் ஃபுளோர்லதான் எல்லாமே நடக்குதுன்னு சொன்னாங்க!...இங்க வந்து பார்த்தா மயான அமைதியாவல்ல இருக்குது!...ஹி.ஹி..ஹி...இதுல அந்த ஏ.சி. வேற கூட்டு...கர்மம்...கர்மம்!”
நேரம் 1.15.
“இந்தச் சூழ்நிலையை அப்படியே போட்டோ எடுத்திட்டுப் போய்க் காட்டி அவனுக அத்தனை பேரோட முகமூடியையும் கிழிக்கணும்!...ராஸ்கல்ஸ்!” என்று நினைத்தபடி தன் காமிராவின் வீடியோ மோடை ஆன் செய்து கவரேஜ் செய்யத் துவங்கியவர் அந்தக் காமிராவின் சின்ன வீடியோத் திரையில் கண்ட காட்சியில் ஆடிப் போனார்.
அவரது கால்கள் “வெட...வெட” வென்று நடுங்க ஆரம்பித்தன.
இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் இறந்து போன அந்த ஐவரில் மூவர் சுவரோரமாய் நின்று கொண்டிருந்தனர். இத்தனை வருடங்களுக்குப் பின்னும் அவருக்கு அவர்களை அடையாளம் நன்றாகவே தெரிந்தது.
சட்டென்று காமிராவிலிருந்து கண்களை விலக்கி வெறும் கண்களால் பார்த்தார். அங்கே சுவரோரமாய் யாருமே இல்லை. குழப்பமானவர், மீண்டும் வீடியோத் திரையில் பார்த்தார். மூன்று பேரும் அதே நிலையில் அப்படியே நின்று கொண்டிருந்தனர்.
அந்தக் கால கட்டத்தில் வேலை சம்மந்தமாக பல முறை அவர்களுடன் பேசிப் பழகியிருந்ததால் அவர்களது பெயர் கூட அவருக்கு அப்படியே ஞாபகமிருந்தது.