நேரம் 1.25.
“பரமசிவம்....ராசு...வடிவேலு!” என்று சன்னமான குரல் அவர்களைப் பெயர் சொல்லி அழைத்துப் பார்த்தார்.
அவர்களிடம் எந்தவித ரீயாக்ஷனும் இல்லாது போக அங்கிருந்து ஓடி விடலாமா? என்று கூட யோசித்தார். ஒரு முடிவாய் அதைச் செயல் படுத்தத் திரும்பிய போதுதான்...
அந்தக் கெட்ட வாடை வீசத் தொடங்கியது.
பிண வாடை
எரியும் மனித எலும்புக் கூடுகளின் நாற்றம்
சதையும், கேசமும் கருகும் காரல்.
“வ்வேய்ய்ய்” என்று தன்னையுமறியாமல் கூவியவர் சட்டென்று திரும்பி மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடி படிக்கட்டருகே வந்த போது..
அவரது சட்டைக் காலரை யாரோ பிடித்து இழுக்க “திக்...திக்” நெஞ்சுடன் திரும்பிப் பார்த்தார்.
பக்கத்திலிருந்த சுவற்றிற்குள்ளிருந்து வெளியே வந்திருந்த ஒரு மனிதக் கைதான் அவரைப் பற்றிக் கொண்டிருந்தது.
வினோதமான முறையில் கூக்குரலிட்டபடி அதைத் தட்டி விடத் திரும்பியவரின் பின் மண்டையில் “மடேர்”என்று ஒரு அடி விழுந்த்து.
அந்த அதிர்வில் அவரது சட்டைக் கலர் சுவர்க் கையிலிருந்து விடுபட,
மாடிப் படிகளில் கீழே இறங்கி வர நினைத்து கால்களை முன் நகர்த்தினார். ஆனால் அவரது காலகள் அவருக்குக் கட்டுப் படாமல் கீழே இறங்குவதற்கு பதிலாய் மேலே ஏறிச் சென்றன.
அவர் மனம் கூவியது “அய்யய்யோ...நான் ஏன் மேல் நோக்கி ஓடுகிறேன்?...கீழ் நோக்கி ஓடத்தானே நினைத்தேன்?”
அந்தக் கூவலை சற்றும் பொருட்படுத்தாத அவர் சரீரம் தொட்ர்ந்து மேல் நோக்கியே ஓடிக் கொண்டிருந்த்து.
“அய்யோ...இதென்ன விபரீதம்?...நான் கீழே போக நெனச்சாலும் என் கால்கள் ஒத்துழைக்க மாட்டேன் என்கின்றனவே!”
மொட்டை மாடியை அடைந்தவர் அவசர அவசரமாய் எந்தப்பக்கம் தப்பிச் செல்ல முடியும் என்பதை பார்வையால் ஆராய்ந்தார்.
வானத்தில் ஒரு எரி நட்சத்திரம் பளீரென்ற வெளிச்சத்துடன் கழன்று விழுந்து மறைந்தது.
அப்போது வாட்டர் டேங்கிலிருந்து வெளியே வந்து விழுந்தது முன்பு இறந்து போன அந்தப் பழைய செக்யூரிட்டியின் உடல்.