தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 10 - முகில் தினகரன்
அந்தப் போட்டோவில், ஒரு சிகப்பு சட்டை அணிந்த இளைஞன் ஒருவனுடன் தங்கவேலு நின்றிருந்தார். அந்த இளைஞன், அச்சு அசலாய்....அப்படியே முரளியின் நகல் போலிருந்தான்.
முரளி குழப்பத்துடன் தலையைத் தூக்கி தங்கவேலுவைப் பார்க்க, “ம்ம்..மீதி போட்டோக்களையும் பாருங்க” என்றார் தங்கவேலு.
அவசர அவசரமாய் அடுத்த போட்டோவிற்குப் போனான். அதில் ஒரு லாரிக்குப் பூசை செய்யப்பட்டுக் கொண்டிருக்க, பக்கத்தில் தங்கவேலுவும், முரளியைப் போலவே இருந்த அந்த இளைஞனும் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர்.
மற்ற போட்டோக்கள் மொத்தத்தையும் பார்த்து முடித்தவன் அந்த ஆல்பத்தைத் தன் தாயிடம் தந்தான். ராக்கம்மாவும், வசந்தியும் அந்தப் போட்டோக்களைப் பார்த்து விட்டு, அந்த தங்கவேலுவைப் பார்த்து,
“அய்யா!.....யாருங்க அய்யா இந்தப் பையன்...அப்படியே அச்சு அசலாய் என் மகன் போலவே இருக்கிறானே?” வியப்புடன் கேட்டாள் ராக்கம்மா.
“அவன்...எங்க டிரான்ஸ்போர்ட் ஓனரோட ஒரே மகன்!...பேரு...கோகுல்!..அந்தப் போட்டோவெல்லாம் புது லாரி வாங்கினப்ப பூஜை செய்த போது எடுத்த போட்டோக்கள்!...இப்ப அந்த கோகுல்..உயிரோட இல்லை!”
அரண்டு போயினர் முரளியும், அவன் தாயும், தங்கையும்.
“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்தப் பூவுலகம் பிடிக்காம...மேலோகத்துக்குப் போயிட்டான்” சொல்லி விட்டு லேசாய்க் கண் கலங்கினார் அந்த தங்கவேலு.
“அடக் கடவுளே!” வாய் மீது கை வைத்து அங்கலாய்த்தாள் ராக்கம்மா.
“ஏன்?...என்னாச்சு அவருக்கு?...ஏதாவது நோயா?” வசந்தி கேட்டாள்.
“இல்லைம்மா!...ஒரு விபத்து!...பசங்க கூட சேர்ந்துக்கிட்டு ஜாலியா...இங்க பக்கத்துல இருக்கற கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சிக்குப் போயிருக்காரு...போன இடத்துல அருவில குளிக்கும் போது கால் வழுக்கிக் கீழே விழுந்தவரை தண்ணி இழுத்திட்டுப் போயிடுச்சு!...ரெண்டு நாளைக்குப் பிறகுதான்...அவர் உடல் கிடைச்சுது!...அதுவும் அந்த இடத்திலிருந்து...சுத்தமா நாலு கிலோமீட்டர் தள்ளி” தங்கவேலு சொல்லிக் கொண்டே போக, அவர் மனைவியும் கண் கலங்கினாள்..
“அன்னிக்கு லோடு இறக்கறதுக்காக அந்த சூடாமணி ரைஸ் மில்லுல உன்னைப் பார்த்ததும்...எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போச்சு...என் முதலாளி மகனையே நேரில் பார்த்தது மாதிரி இருந்திச்சு!...அதனாலதான் நானே வலிய வந்து உன் கிட்டப் பேச்சு குடுத்தேன்!...அந்த ரைஸ் மில் முதலாளி உன்னை அதட்டறதையும்...விரட்டறதையும் பார்த்து