“த பாரு மல்லிகா...நீ இங்க நிற்க வேணாம்....யாராவது பார்த்தாங்கன்னா..இல்லாததையும்...பொல்லாததையும் சொல்லுவாங்க!...அதனால...நீ உடனே அறைக்குள்ளார போய் வெய்ட் பண்ணிட்டிரு!...நாங்க போயி மாப்பிள்ளை எங்க இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சு இங்க அனுப்பி வைக்கறோம்” சொல்லி விட்டு இரண்டு அத்தைகளும் புயலாகக் கிளம்பினர்.
தங்களை நோக்கி பரபரப்பாய் வந்த தன் சகோதரிகளை புருவங்களை நெரித்துக் கொண்டு பார்த்தார் ராமலிங்க பூபதி. “என்னம்மா...என்ன பிரச்சினை?...ஏன் ரெண்டு இப்படி பேயைப் பார்த்த மாதிரி வர்றீங்க?”
“ம்ம்...இப்பத்தான் உன் பொண்ணை முதலிரவு அறைக்குள்ளார தள்ளிட்டு வர்றோம்” என்றாள் பெரிய அத்தை.
“ஹே...ஹே...ஹே...”....இது நல்ல விஷயம்தானே?..இதுக்கு ஏன் இந்தப் பரபரப்பு?” பெரிய ஹாஸ்யத்தைக் கேட்டவர் போல் அவர் ஓங்கிச் சிரிக்க,
“ச்சூ” என்று அவரை அடக்கி விட்டு, “ரூமுக்குள்ளார மாப்பிள்ளை இல்லை” சன்னக் குரலில் சொன்னாள் சின்ன அத்தை.
“அட...நல்லாப் பாருங்கம்மா..பாத்ரூமுக்குள்ளார கீது இருப்பார்” சாதாரணமாய்ச் சொன்னார் ராமலிங்க பூபதி.
“அய்யோ...அண்ணா..நாங்க மொதல் வேலையா பாத்ரூமுக்குள்ளாரதான் பார்த்தோம்!...பாத்ரூம் வெளிய தாழ் போட்டிருக்கு!...அதுக்கப்புறம்...மண்டபத்தையே சல்லடை போட்டுப் பார்த்திட்டோம்!..ம்ஹும்...மாப்பிள்ளை கண்ணுக்கே படலை!...அவர் மண்டபத்திலேயே இல்லை போலிருக்கு!”
யோசனையுடன் மேவாயைத் தடவிய ராமலிங்க பூபதி, “நீங்க இந்த விஷயத்தை வெளிய சொல்லிட்டுத் திரியாதீங்க...நான் போய் மாப்பிள்ளையோட அப்பா அம்மா கிட்டப் பேசிட்டு வர்றேன்” சொல்லி விட்டு வேக வேகமாய் நடந்தார்.
தனசேகரின் தந்தை பொன்னுரங்கமும், தாய் சுந்தரியும் திருமணம் நல்ல முறையில் முடிந்து விட்ட சந்தோஷத்தில் ஜாலியாய் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தனர்.
“சம்மந்தி...உங்க கிட்டக் கொஞ்சம் பேசணும்!” சொல்லியபடியே வந்த ராமலிங்க பூபதி, தானே ஒரு சேரை இழுத்துப் போட்டு அவர்கள் பக்கத்தில் அமர்ந்தார்.
“ம்...சொல்லுங்க சம்மந்தி” என்றார் பொன்னுரங்கம்.
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, “உங்க மகன் எங்கே?” கேட்டார்.
“இதென்ன கேள்வி?..சாந்தி முகூர்ந்த அறைக்குள்ளார இருப்பான்” என்றார் பொன்னுரங்கம்.