“இல்லை...உங்க மகன்...அந்த ரூமுக்குள்ளார இல்லை!...அங்க மட்டுமில்லை...இந்த மண்டபத்திலேயே இல்லை!...எங்கியோ வெளிய கிளம்பிப் போயிட்டார்? கோபமாய்ச் சொன்னார் ராமலிங்க பூபதி.
“எதை வெச்சு அப்படிச் சொல்றீங்க?...அவன் வெளிய போனதை நீங்க பார்த்தீங்களா?” கோபமாய்க் கேட்டார் பொன்னுரங்கம்.
“நான் பார்க்கலை...கல்யாண மண்டப வாட்ச்மேன் பார்த்திருக்கான்!...அவன் தெளிவா சொல்றான்!”
அதிர்ந்து போனார் பொன்னுரங்கம். அவர் முகத்தில் தெரிந்த கலக்கத்தைக் கண்டுபிடித்து விட்ட சுந்தரி, மெல்ல அவரருகே வந்து, “ஏங்க...அந்த முரளிப்பயல் கல்யாணத்துக்கு வரலை...என்பதால் அவனைத் தேடி அவன் வீட்டிற்கே போயிருப்பானோ?” என்று சொல்ல,
தன் வாய் மீது ஆட்காட்டி விரலை வைத்து அவளைப் பேச விடாமல் செய்தவர், “அதை சம்மந்தி இருக்கும் போது பேசாதே...நான் நைஸா அங்கியும் போய் பார்த்திட்டே வந்திடறேன்” என்றார் சன்னக் குரலில்.
“என்ன சம்மந்தி நான் இங்க உட்கார்ந்திட்டிருக்கேன்...அங்க நீங்க ரெண்டு பேரும் என்னமோ ரகசியம் பேசிட்டிருக்கீங்க?...என்ன விஷயம்?” கறாராய்க் கேட்டர் ராமலிங்க பூபதி.
“ஒண்ணுமில்லைங்க சம்மந்தி!...எங்க நெருங்கிய சொந்தத்துல ஒருத்தர் கல்யாணத்துக்கு வரலை...அதான் அவங்களை விசாரிக்கப் போயிருப்பானோ?னு தோணுது!...எதுக்கும் நான் ஒரு எட்டு போய்ப் பார்த்திட்டே வந்திடறேன்” என்று சொல்லி விட்டு உடனே எழுந்தார் பொன்னுரங்கம்.
“பார்த்திட்டு வந்தா மட்டும் பத்தாது...மாப்பிள்ளையைக் கையோட கூட்டிட்டும் வாங்க!...ஜோசியர் சொன்னது ஞாபகமிருக்கல்ல?...இன்னிக்கு சாந்தி முகூர்த்தம் வைக்கலேன்னா...அடுத்து...அஞ்சு மாசம் கழிச்சுத்தான் வைக்க முடியுமாம்” ஞாபகமூட்டி அனுப்பினார் ராமலிங்க பூபதி.
“நாட்டுல அவனவன் எப்படா முதலிரவு வரும்?னு காத்திட்டிருப்பாங்க!...இந்தப் பயல் என்னடான்னா...பயந்து ஓடிட்டான்!...ஹும்...என்ன ஆம்பளையோ?” தனசேகரின் பெற்றோர் காதுகளுக்கு கேட்கும் விதமாகவே சொல்லி விட்டு நடந்தார் ராமலிங்க பூபதி.
தொடரும்