என்றாள் ராக்கம்மா ஜெகதாம்பாளின் கால்களை அமுக்கி விட்டபடியே.
“ஆமாம்...இந்த முரளி...உன்னோட மகனா ராக்கம்மா?....” மெல்லக் கேட்டாள் ஜெகதாம்பாள்.
தலையை மேலும் கீழும் ஆட்டினாள் ராக்கம்மா.
“அவனைப் பார்த்தால் அசப்பில் என் மகன் கோகுல் மாதிரியே இருந்ததினால்..நான் அவனை என் மகன்னே நினைச்சிட்டேன்!” என்றாள் ஜெகதாம்பாள்.
“அதிலென்ன தப்பு?...நீங்க பெற்றால்தான் உங்க மகனா?...யார் மேலெல்லாம் நமக்கு உண்மையான...சுயநலமில்லாத...பாசம் உண்டாகுதோ அவங்க எல்லோருமே நமது குழந்தைகள்தான்” பெருந்தன்மையோடு சொன்னாள் ராக்கம்மா.
அவளை நெகிழ்ச்சியோடு பார்த்தாள் ஜெகதாம்பாள்.
அன்று மாலை அவள் கணவர் சிங்கமுத்து வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாய், “ஏங்க...இந்த முரளி அச்சு அசப்புல இறந்து போன நம்ம மகன் கோகுல் மாதிரியே இருக்கான் பார்த்தீங்களா?” என்றாள் ஜெகதாம்பாள்.
ஆச்சரியமான சிங்கமுத்து, ஹாலில் மாட்டியிருந்த கோகுலின் போட்டோவையும் அதற்கு போடப்பட்டிருந்த மாலையையும் கண்கள் கலங்கப் பார்த்தார்.
“அந்த முரளியோட அம்மாவே சொல்லிட்டாங்க!... “இவனும் உங்க குழந்தைதான்!...தாராளமா நீங்க அவன் மேல் அன்பு காட்டலாம்...பாசம் காட்டலாம்”ன்னு..” எனாள் ஜெகதாம்பாள் வெகு இயல்பாய்.
“அப்படின்னா...இவ மனசு மகன் இறந்து போனதை ஏற்றுக் கொண்டு விட்டதா?...அந்த முரளி இன்னொருத்தியின் மகன் என்பதையும் புரிந்து கொண்டு விட்டதா?” உள்ளுக்குள் சந்தோஷமான சிங்கமுத்து,
“அம்மாடி...புத்திர சோகம் நம்ம ரெண்டு பேரையும் பாதிச்சிடக் கூடாது!ன்னுதான் அந்த ஆண்டவனா பார்த்து இந்த முரளியை நமக்கு அடையாளம் காட்டியிருக்கான்!...அதனால ஆண்டவன் காட்டிய வழியை நமக்கு ஆறுதலான வழியாய் ஏற்றுக் கொண்டு அந்த முரளியையே நம்ம மகனாய் வளர்ப்போம்!” என்றார்.
அந்த மனோதத்துவ மருத்துவர் சொன்ன வழிமுறைகளைப் பின் பற்றியதில் ஜெகதாம்பாள் நார்மலுக்கு வந்து விட்ட சந்தோஷத்தை டாக்டரிடம் போன் மூலம் பகிர்ந்து கொண்டார் சிங்கமுத்து.
“நான்தான் அப்போதே சொன்னேனே?... “இது சாதாரண பிரச்சினைதான்...இதை எளிதில் தீர்த்து விடலாம்!”னு...அதே போல் ஆகிவிட்டது பார்த்தீர்களா? டாக்டரும் மகிழ்ந்தார்.
தொடரும்