தொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 02 - சுபஸ்ரீ
காந்தம் போல இரு ஜோடி கண்கள் ஒன்றை ஒன்று கவர்ந்திழுத்தது. அதில் வியப்பும் கலந்திருந்தன. ஆம் உங்கள் யூகம் சரிதான், அவை ராகவன் மற்றும் பத்மினியின் விழிகள்தான். அதற்கான காரணம் இருவரும் ஒரே நேரத்தில் உதிர்த்த ஒரே சொற்கள். அதுவும் தங்களின் முதல் சந்திப்பில்.
அரைமணி நேரம் முன்புதான் ராகவன் தன் பெற்றோர் மற்றும் அக்கா குடும்பத்துடன் பத்மினியைப் பெண் பார்க்க வந்திருக்கிறான்.
இருவரும் ஒரே சமயத்தில் “எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லை” என்ற சொற்களை உதிர்த்தார்கள். பத்மினி உதட்டில் லேசான புன்னகை ஒட்டிக் கொண்டது. ராகவனின் மன இறுக்கம் சற்றே தளர்ந்தது.
பத்மினி தொடங்கினாள் “நான் பி.எல். முடிச்சிருக்கேன் மேல எம்.எல். படிக்கணும். அதுவும் என் பணத்துல . . . அப்பாவ கஷ்டப்படுத்தாம . . . அடுத்து ஒரு நல்ல லாயர்னு பெயர் எடுக்கணும். பெண்களுக்காகப் போராடணும் இப்படி நிறைய லட்சியம் கனவு இருக்கு.”
“அதனால இப்போதைக்குக் கல்யாணம் குடும்பம்னு கவனம் செலுத்த முடியாது.” என்றாள். கைகளை குறுக்கே கட்டிக் கொண்டு சிந்தனைவயப்பட்டவளாகப் பேசினாள்.
பத்மினி வயது 27 சொல்லில், செயலில், எண்ணத்தில் ஒரு நேர்த்தி இருக்கும். கம்பீரமான பேச்சு அவள் கவசம். கூர்மையானப் பார்வை.
நெற்றி பகுதியில் லேசான சுருள் முடிகள். ஸ்ரீதேவி மூக்குத்தி, சன்னமான தங்க சங்கிலி. கண்ணை உறுத்தாத தங்க தோடுகள் மற்றும் வளையல்கள். சின்ன பொட்டு, காட்டன் புடவை என ஆர்ப்பாட்டம் இல்லாத ஒப்பனை.
அவள் பக்கமாய் ராகவன் மனம் வெண்ணெய் போல மெதுவாய் நழுவியது.“அட என்ன இது?” எனத் தன்னை சுதாரித்து தொண்டையை செறுமினான். இறுக்கம் தளர்ந்த முகத்தில் அதிமெல்லிய புன்முறுவல்.
ராகவன் “ ஒரு நல்ல டைரக்டரா சினீ பீல்டுல வரணும் . . . இது சின்ன விதையா தொடங்கி இப்ப பெரிய விருட்சமா என் மனசுக்குள்ள இருக்கிற ஆசை . . . வெறி எப்படி வேணா எடுத்துக்கலாம்.” தோளைக் குலுக்கினான்.
இருவரும் ஒருவருக்கொருவர்க் கைக் குலுக்கி தங்கள் லட்சியம் நிறைவேற வாழ்த்துத் தெரிவித்துப் பிரிந்தனர். அனைவர் முன்னிலையில் எதுவும் சொல்லாமல் “யோசிக்க டைம் வேணும்” என்றனர்.