கத்துகணும்” என்றார்.
“நாளைக்கு கல்யாணம் பண்ணி போகப் போற பொண்ணுங்க . . .” எனச் சொல்ல வந்தவரை
“அலமு அவங்க விருப்பம்தான் முக்கியம்” என்று விட்டார் நாரதர்.
நாரதர் தன் பெண் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றினார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் வளா்ந்தனர் பெண்கள். அதில் பத்மினி தனித்துவமாய் விளங்கினாள்.
முதல் பெண் லலிதாவிற்குத் திருமணம் முடிந்து டெல்லியில் வாசம். இப்போது பத்மினிக்கு வரன் பார்க்கின்றனர். அலமுவிற்கு எப்படியாவது பத்மினிக்கு நல்ல வரன் அமைய வேண்டுமே என்கிற கவலை. தினந்தோறும் கடவுளுக்கு விண்ணப்பம் செலுத்திக் கொண்டே இருந்தார்.
பத்மினி தனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்றாலும் “பாரு பப்பி எங்களுக்கும் வயசாச்சு . . . உனக்கு அடுத்து ஒருத்தி இருக்கா . . . அவளுக்கு கல்யாணம் காட்சி பண்ண வேண்டாமா?” என அலமு பத்மினி மனதை மாற்ற தொடர்ந்து முயன்றுக் கொண்டிருந்தார்.
“ராகிக்கு வரன் பாருங்களேன். . எனக்குனு சில லட்சியம் கனவு இருக்கு” பத்மினி கூற
“எல்லாத்தையும் உன் கல்யாணத்துக்கு அப்புறம் பண்ணு” கவலையுடன் கூறினார்.
“பிராக்டிகலா நடக்காத காரியம் அம்மா”
“நாம லட்சியங்களை அடையணும்னா அதுக்கு எந்த தடை வந்தாலும் மனவுறுதி இருந்தா தடைகளை தகர்த்து முன்னேறலாம். கல்யாணம் ஒரு தடையா நான் நினைக்கல. ஆனாலும் உன் விருப்பம்தான் எனக்கு முக்கியம் பப்பி” என நாரதர் சொல்லிவிட்டார்.
பெற்றோரின் திருப்திக்காக ராகவன் வீட்டினர் பெண் பார்க்க வர சம்மதித்தாள். தன் முடிவைப் பெண் பார்க்க வருபவனிடம் சொல்லிவிடலாம் என திட்டமிட்டாள்.
விசு தன் குடும்ப சகிதமாக வந்தார். அதிக ஒப்பணை இல்லாது சாதாரணமாகவே இருந்தாள் பத்மினி.
சம்பிரதாயமாகப் பெண் பார்க்கும் படலம் சொஜ்ஜி பஜ்ஜியுடன் நடந்தது. ருசித்துச் சாப்பிட்ட விசுவை கோதாவரி முறைக்க . . . ரசிக்காததுப் போல இரண்டாம் முறை கேட்டுச் சாப்பிட்டார்.
“அது ஒண்ணுமில்ல கோதாவரி உப்பு காரம் சக்கர அளவு சரியா இருக்கானு பார்த்தேன் அவ்ளோதான். என்ன இருந்தாலும் உன் கைப் பக்குவம் வருமா?” என சமாளித்தார்.
ராகவன் பத்மினியிடம் தனியே பேச வேண்டும் என்று கூறினான். விசு தன் மகன் என்ன பேசப் போகிறான் என யூகித்தார்.