“அதை நான் சொல்றேன்” என்றபடியே வீட்டிற்குள் வந்த தங்கவேலு அங்கிருந்த நாற்காலியில் தானும் அமர்ந்து தனசேகரையும் அமர வைத்தார்.
ராக்கம்மா எதையோ சொல்ல வாயெடுக்க,
“அம்மா...எனக்கு எல்லா விபரத்தையும் இந்த தம்பி சொல்லிட்டாரு!...இவனைப் பெத்தவங்க உங்களை ஊரை விட்டுப் போகச் சொன்ன விஷயம் இந்த தம்பிக்கே தெரியாது!...இவன் தன்னோட கல்யாணத்துக்கு முரளி “வருவான்...வருவான்”...ன்னு வழி மேல் விழி வெச்சுக் காத்திட்டிருந்திருக்கான்!...கல்யாணம் முடிஞ்ச பிறகும் முரளி வராததில் சந்தேகப் பட்டு அவன் வேலை செஞ்சிட்டிருந்த ரைஸ் மில்லுல போய் விசாரிச்சிருக்கான்!..அப்பத்தான் விஷயம் புரிஞ்சிருக்கு!” என்று சொல்லி நிறுத்தினார் தங்கவேலு.
கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த ராக்கம்மா திரும்பி தனசேகரைப் பார்க்க,
மீதியை தனசேகர் சொன்னான், “அம்மா....நண்பனை இழந்து ஒரு மனைவியைப் பெறுவதை என் மனசு ஏத்துக்கலைம்மா...அதனால...”
“அதனால....”
“முரளியை என் கிட்டேயிருந்து ஒதுக்கினாங்க...நான் அந்தப் பெண்ணை என் கிட்டயிருந்து ஒதுக்கிட்டேன்!.....எப்ப என் முரளி கூட சேருகிறானோ அப்பத்தான் அந்த மனைவியும் சேரணும்!”னு ஒரு கனமான நிபந்தனையைப் போட்டு அவளை கல்யாண மண்டபத்திலிருந்தே அவ வீட்டுக்கு அனுப்பி வெச்சிட்டேன்!...இப்ப கிட்டத்தட்ட ஏழு மாசமாச்சு!...யார் யாரோ வந்து என்னென்னமோ சமாதானம் சொல்லிப் பார்த்தாங்க!...ம்ஹும்...நான் கேட்கலையே?...எனக்கு முரளிதான் முக்கியம் அந்த மனைவி இரண்டாவதுதான்” என்றான் தனசேகர்.