புலிகளிடமல்லவா அந்தப் புள்ளிமான் சிக்கியுள்ளது?
புதருப்பின் பின்னால் மண் தரையில் ஒரு கொடுமை நிகழவிருப்பதை மௌனமாய்ப் பார்வையிட்டது மேலே நகர்ந்து கொண்டிருந்த நோயாளியான துண்டு நிலா. நட்சத்திரங்களில் சில துடித்தன.
இனி தப்பிக்கவே இயலாது என்கிற நிலைக்குப் போய் விட்ட வசந்தி மெல்ல...மெல்ல...மயக்கத்திற்குப் போக,
எங்கிருந்தோ வந்த அந்த உருவம் அந்த இருவரில் ஒருவனுடைய இடுப்பில் பலங் கொண்ட மட்டும் உதைக்க, பத்தடி தள்ளிப் போய் விழுந்தான் அவன்.
சுதாரித்துக் கொண்ட இன்னொருவன் அந்த உருவத்தைத் தாக்க முயல, அவன் மண்டை மேல் இடி போல் விழுந்தது ஒரு அடி.
“அய்யோ”என்று கத்தியவாறே சுருண்டு விழுந்தான் அவன்.
இதற்குள் முதலாமவன் எழுந்து ஓடி வர, அவனுக்கும் மண்டை மேல் இடி இறங்கியது.
சத்தமேயில்லாமல் மயங்கி விழுந்தான் அவன்.
அரை மயக்கத்தில் கிடந்த வசந்திக்கு அங்கு எதோ நடக்கின்றது, என்று மட்டும் தெரிந்தது. ஆனால், என்ன நடக்கின்றது? என்பது தெளிவாய்ப் புரியவில்லை.
அந்த இருவரையும் சாய்த்த பின், அவளை ஒரே அள்ளாய் அள்ளிக் கொண்டு புதருக்கு வெளியே கொண்டு வந்த அந்த உருவம், ஆளரவமில்லாத சாலையில் நிதானமாய் நடந்து சென்றது.
அந்த உருவத்தின் பிடியிலிருந்து எப்படியாவது விடுபட்டு விட வேண்டும், என்று அவள் மனம் எண்ணினாலும் உடல் ஒத்துழைக்காது போக, அப்படியே கிடந்தாள்.
நேரம் போகப் போக, அந்த உருவத்தின் நடை வேகம் கூடிக் கொண்டே போனது.