மஞ்சுவும், வினோதினியும் ஜோதியுடன் இப்போது நட்பு பாராட்டவும், நிர்மலாவிற்கு கொஞ்ச நஞ்சம் இருந்த கோபமும் மொத்தமாக காணாமல் போனது...
ஆனால் பத்மா விஷயம் அப்படியே தலைக்கீழ்!!! அம்மா என்ற கூடுதல் உரிமை வேறு பத்மாவிற்கு இருந்ததால், இன்னுமும் கை நிறைய சம்பளம் தரும் வேலையை மஞ்சு ராஜினாமா செய்ததற்கு கோபமாகவே இருந்தாள்...
மஞ்சுவிற்கு அம்மாவைப் பற்றி தெரியும் என்பதால்... அம்மாவிடம் செல்லம் கொஞ்சி கோபத்தை குறைக்க முயன்றுக் கொண்டிருந்தாள்...
இப்போதும் அதையே செய்பவளாக பெரியவர்களிடம் சென்றாள்...
“என்ன செய்றீங்க அத்தை?”
“பழத்தை எல்லாம் தாம்பால தட்டுல எடுத்து வைக்கனும் மஞ்சு... வினோதினி செய்றேன்னு சொல்லி இருந்தா... குழந்தை அழவே, அவளை அவனை பார்க்க அனுப்பி வச்சேன்...”
“சரி, நான் செய்றேன் அத்தை... நீங்க போய் சொந்தக்காரங்க கிட்ட பேசுங்க... நிறைய பேர் உங்களை தேடிட்டு இருந்தாங்க...”
“நீயே ஏற்கனவே நிறைய வேலை செய்துட்ட மஞ்சு... வந்ததுக்கு ரொம்ப இளைச்சு போயிட்ட... எனக்கே பாவமா இருக்கு...”
“அதெல்லாம் நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதும் பேசிக்கலாம் அத்தை... இப்போ இந்த வேலையை நான் பார்க்கிறேன்... “ என்று சொல்லிக் கொண்டே நிர்மலா கையில் இருந்த தட்டை வாங்கிக் கொண்டாள் மஞ்சு...
“நீங்களும் வரீங்களா...?” என நிர்மலா பத்மாவை அழைக்கவும்,
“போங்கம்மா... அத்தைக்கு துணையா இருக்கும்... இங்கே நானே பார்த்துக்குறேன்...” என்றாள்