“ஜோதிக்கும் அது பிடிக்கும். அவ சின்னப் பொண்ணா இருந்தப்போ நான் கோலம் போடும் போது கூடவே வந்து உட்கார்ந்திருப்பா.”
நிர்மலா தானாக மீண்டும் ஜோதி பற்றி பேசவும், அதை தடுக்காமல் அப்படியே பேச்சை தொடர்ந்தாள் மஞ்சு.
“மனோஜ், அவரோட அண்ணன் அவங்க இரண்டுப் பேரும்?”
“அவங்களும் உதவுவாங்க. ஒருத்தன் பெருக்குவான், ஒருத்தன் தண்ணி தெளிச்சு கொடுப்பான். இரண்டுப் பேரும் எப்போவுமே அப்படி தான்.”
அது வரை அமைதியாக இருந்த வினோதினி,
“இவரும் வேலை எல்லாம் செய்தாரா? அதிசயமா இருக்கு...” என்றாள்.
மகனுடன் ஹாலில் விளையாடிக் கொண்டிருந்தாலும், இந்த பேச்சையும் கவனித்துக் கொண்டிருந்த ஷண்முகம்,
“வினோ, நான் உனக்கு எந்த வேலை செஞ்சுத் தரலைன்னு அப்படி சொல்ற?” என அங்கே இருந்தே குரல் கொடுத்தான்.
இதற்கு வினோதினி பதில் சொல்லும் முன் முந்திக் கொண்டு,
“என்ன இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க? வினோ லிஸ்ட் போட்டா வருஷக்கணக்கில போகுமே...” என்றாள் மஞ்சு...
அவள் எதிர்பார்த்துப் போலவே குழந்தையை தூக்கிக் கொண்டே கிச்சன் அருகே வந்த ஷண்முகம்,
“இதெல்லாம் அநியாயம் மஞ்சு...” என்றான்...