மது கார்த்திகேயனை அதிக நேரம் காத்திருக்க வைக்கவில்லை. சொன்னதுப் போலவே பத்து நிமிடத்தில் ஹோட்டல் வாசலில் அவனை சந்தித்தாள்.
“வாங்க கார்த்திக், நடந்துட்டேப் பேசலாம்...”
மது சொன்னதை கார்த்திகேயனும் ஏற்றுக் கொள்ள, இருவரும் விளக்குகளால் ஒளிப் பெற்று மின்னிக் கொண்டிருந்த சாலையோரமாக நடந்தார்கள்.
ஏதோ யோசனையில் இருப்பது போல இருந்த மது அமைதியாகவே நடந்தாள்... கார்த்திகேயனும் அவளாகவே பேசட்டும் என்ற எண்ணத்துடன் அமைதியாக நடந்தான்.
திடீரென,
“நீங்க பட் ஹோம்பார்க்குக்கு வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை, கார்த்திக்,” என்றாள் மது.
கார்த்திகேயன் அவளை கேள்வியாகப் பார்த்தான்...
“உங்களுக்கும் அத்விக்கும் கல்யாணம் நிச்சயமாகி இருந்தது எனக்கும் தெரியும்... அவக் கடைசி நிமிஷத்துல வேண்டாம்னு நிறுத்தினதும் தெரியும்...”
“...”
“அவ மேல கோபப் படுவீங்க, திட்டுவீங்க, மறந்திருவீங்கன்னு நினைச்சேன்... நீங்க அவளைத் தேடி பட் ஹோம்பார்க்குக்கே வந்து நிப்பீங்கன்னு நாங்க இரண்டுப் பேருமே எதிர்பார்க்கலை...”
“உங்களுக்கு எப்படி தெரியும்?”
“இட்ஸ் ஆப்வியஸ்! இந்தியால இருந்து ஜெர்மனிக்கு டூர் வரவங்க நேரா பட் ஹோம்பார்க்குக்கு வர மாட்டாங்க... இது அப்படி ஒரு பாப்புலர் டூரிஸ்ட் ஸ்பாட் இல்லை...”
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.