அவனின் பார்வையினால் மனதில் சற்றே தடுமாற்றம் இருந்த போதும், அதை வெளிக் காட்டாமல், அவனின் பார்வையை நேராக சந்தித்த பாரதி,
"எனக்கு நிஜமாகவே புரியலை சார்.... நீங்களே சொல்லுங்கள்..." என்றாள்.
"நீங்க ரொம்ப புத்திசாலி, பாரதி! எப்படியோ பேசி சமாளிச்சு திரும்ப கேள்வியை என் பக்கமே தள்ளி விட்டுட்டீங்க! சரி, நானே சொல்றேன்... இதுக்கு காரணம் மது தான்...." என்றான் விவேக்.
"மதுவா???? புரியலையே சார்...."
"ம்ம்ம்ம்... ஆமாம்... மது தான்... கொஞ்சம் விளக்கமா சொல்றேன்... ஆனால் பாரதி, இது கொஞ்சம் ரகசியமான விஷயம். உங்களை நம்பி சொல்றேன்... தயவு செய்து யார் கிட்டேயும் சொல்லாதீங்க..."
சரி என தலை அசைத்தாள் பாரதி.
"பார்த்திபன் உங்களைப் பத்தி சொன்னான்... நீங்களும் பாலாவும் லவ் செய்ததை பற்றியும், பாலா எப்படி பணத்திற்காக மனதை மாற்றிக் கொண்டான் என்பதை பற்றியும் சொன்னான்... எனக்கு ரொம்பவே ஆச்சர்யமாக இருந்தது பாரதி... அந்த ஒரு பெரிய குழப்பமான சூழ்நிலையை நீ கையாண்ட விதம் அருமை..."
திடீரென விவேக் அவளை ஒருமையில் அழைக்கவும் திடுக்கிட்ட பாரதி, அவனை திருத்த எண்ணி வாய் திறந்தாள். ஆனால், விவேக் எங்கோ பார்த்தப் படி கிட்டத்தட்ட தன்னை மறந்த நிலையில் பேசுவதைக் கண்டு சற்றே தயங்கி, வாயை மூடிக் கொண்டாள்.
"நான் இப்போ சொல்வதைக் கேட்டு நீ என்ன நினைப்பன்னு எனக்குத் தெரியலை... மதுக்கு இப்போ பதினெட்டு வயசு தான் ஆகுது... ரெண்டு வருஷத்துக்கு முன் அவள் பத்தாம் வகுப்பில் இருந்தப் போது, எங்க வீட்டு டிரைவர் கூட காதல் என்று கண்ணை மூடி நம்பிக் கொண்டிருந்தாள்... அவளை மட்டும் தப்பு சொல்ல முடியாது. எங்க எல்லோரையும் தான்