அவளை ஒருமையில் அழைத்ததை எண்ணி புன்னகைத்தாள்.
*************
மதுமதியின் வாழ்க்கை சில நாட்களாகவே ரொம்பவும் மாறிப் போயிருந்தது. பொதுவாக அவளிடம் எப்போதும் இருக்கும் ஒதுக்கம் மறைந்து மற்றவர்களிடம் ஓரளவிற்கு சகஜமாக பேசும் மனோபாவமும் ஏற்பட்டிருந்தது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் பாரதி தான். கல்லூரியில் நடக்கும் சிம்போஸியம், கருத்தரங்குகள் போன்ற குழு நிகழ்சிகளில் மதுவை ஈடுப்படச் செய்தாள். மதுவின் வாழ்வில் நடந்த கசப்பான நிகழ்வுகள் தனக்கு தெரியும் என்றெல்லாம் பாரதி காட்டிக் கொள்ளவில்லை. பவித்ராவும் கூட மதுமதியிடம் சிறப்பு கவனம் செலுத்த தான் செய்தாள்!
வீட்டில் உமாவும், கல்லூரியில் பாரதியும், பவித்ராவும் கிட்டத்தட்ட ஒரே விஷயத்திற்கு முயன்றதால் மூன்று மாதங்களில் மதுவிடம் நல்ல வேறுபாடு தோன்றியது.
மதுவிடம் ஏற்பட்டிருந்த மாற்றங்களை பாரதியும் கவனித்தாள். விவேக் இதில் மகிழ்ச்சி அடைவான் என மனதில் நம்பினாள்.
மூன்று மாதங்களுக்கு முன் விடுதியில் சந்தித்து பேசிய பிறகு விவேக்கை சந்திக்கும் வாய்ப்பு அவளுக்கு கிடைக்கவில்லை. அதில் பாரதிக்கு பெரிய அளவில் வியப்பும் இல்லை. மதுவின் குடும்பத்தாரை பொதுவாக சந்திப்பதே கடினம், அதிலும் கல்லூரியில் சந்திப்பது மிகவும் அரிது தான். விவேக் அன்று அவளிடம் திருமணம் குறித்து பேசியதும் தங்கைக்காக மட்டும் தானே!
இப்படி நாட்கள் சென்று கொண்டிருக்கையில் எதிர்பாராது விவேக்கை சந்திக்கும் வாய்ப்பு பாரதிக்கு கிடைத்தது. அன்று கல்லூரி முடிந்து, பேருந்து நோக்கி பாரதியும், பவித்ராவும் நடந்து சென்றுக் கொண்டிருந்தப் போது,
“மேடம்...” என்றக் குரல் அவர்களை தடுத்து நிறுத்தியது.
இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தார்கள். அங்கே ஒரு காரின் அருகே நின்றிருந்த மதுமதி தான் அவர்களை அழைத்தது என்பது புரிந்தது. அவளின் அருகிலேயே விவேக்கும்