வேறு ஒரு பெண்ணும் கூட நின்றிருந்தார்கள். பல நாட்களுக்குப் பிறகு விவேக்கை கண்டதில் பாரதிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் விவேக்கிடம் இருந்து ஒரு சின்ன புன்னகை கூட கிடைக்கவில்லை. கருப்புக் கண்ணாடி அணிந்தப் படி நின்றிருந்தவன், பாரதியை கவனித்ததாகக் கூடத் தெரியவில்லை. மது தான் வேகமான நடையுடன் இவர்கள் இருவர் அருகில் வந்தாள்.
“சாரி மேடம்... இப்போ, இங்கே சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... நாளைக்கு என் பர்த்டே. என்னோட பர்த்டே பார்ட்டிக்கு நீங்க இரண்டு பேரும் வரனும்னு இன்வைட் செய்ய தான் வந்தேன்... நாளைக்கு ஈவ்னிங் தான் பார்ட்டி. அதனால, நாளைக்கு காலையிலே சொல்லலாம்னு நினைச்சேன்... ஆனால், அண்ணா நாளைக்கு காலேஜுக்கு லீவ் போட சொல்றார். அது தான் இன்னைக்கு இப்படி அவசர அவசரமா இன்வைட் செய்றேன்... நீங்க இரண்டுப் பேரும் கட்டாயம் வரணும்... பார்ட்டி எங்க வீட்டுல தான்...”
என்ன பதில் சொல்வது என்று பாரதி யோசிக்கும் போதே,
“இப்படி லாஸ்ட் மினிட்ல சொன்னால் எப்படி மது? வேற யாரை எல்லாம் இன்வைட் செய்திருக்கிற?” எனக் கேட்டாள் பவித்ரா.
“கல்பனா மேடம், மோகன் சார், கனிமொழி மேடம் கூப்பிட்டு இருக்கேன்... அப்புறம் எங்க கிளாஸ்ல எல்லோரையும் இன்வைட் செய்யப் போறேன்...”
“ஓஹோ....” என்றபடி பாரதியை கேள்வியாய் பார்த்தாள் பவித்ரா.
பாரதிக்கு மதுவின் வீட்டிற்கு செல்ல விருப்பம் இருக்கவில்லை. விவேக்கின் இந்த பாராமுகம் வேறு அவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இது என்ன இப்படி வேண்டும் என்றால் வந்து பேசுவது, வேண்டாமென்றால் கண்டுக் கொள்ளாமல் இருப்பது!!! அவன் மட்டும் அப்படி இருக்கும் போது அவள் ஏன் அவன் வீடு தேடி செல்ல வேண்டும்??? போவது மதுவிற்காக என்றாலும் கூட...
ஒரு முடிவிற்கு வந்தவளாக,