“அடிப் பாவி...!!! அவர் வந்து ப்ரபோஸ் செய்த போதே ஆமான்னு தலை ஆட்டி இருக்கலாம் தானே...??”
“ப்ச்... பவி, உனக்கு நான் சொல்வதுப் புரியலை... இப்போ என் கவலை எல்லாம் எங்கே விவேக்கை எனக்குப் பிடிச்சிருமோன்னு தான்...”
தோழியை குழப்பமாய் பார்த்தாள் பவித்ரா.
“எனக்கு புரியலை பாரு...”
“உனக்கு தான் எல்லாம் தெரியுமே பவி... முன்னாடி அந்த பாலா...”
“இப்போ எதுக்கு அவனைப் பத்தி பேச்சு?” என்றாள் பவித்ரா குறுக்கிட்டு.
“இப்போ பேச எனக்கும் தான் பிடிக்கலை பவி... ஆனால் நம்ம காலேஜ் டேஸ் யோசிச்சுப் பாரு... அப்போ அந்த பாலா எப்படி இருந்தான்னு உனக்கும் ஞாபகம் இருக்கு தானே? காலேஜ் முடிச்சு ஒரு ஆறு, ஏழு வருஷம் கழிச்சு அவனைப் பத்தி பேசுறதுக்கு கூட எனக்குப் பிடிக்காதுன்னு அப்போ யாராவது சொல்லி இருந்தால் நம்பிக்கை வந்திருக்குமா?”
பாரதி சொல்வது பவித்ராவிற்கு புரிந்தது. கல்லூரி நாட்களில் பாலா பழகுவதற்கு மிகவும் இனிமையானவனாக இருந்தான். பார்ப்பதற்கு அழகனாகவும், மென்மையான குணமுள்ளவனாகவும் தோன்றிய அவன் மீது பல பெண்களுக்கும் ஒரு கண் தான். ஆனால் பாலா பொதுவாக விரும்பிப் பேசியது பாரதியிடம் மட்டுமே. இரண்டு ஆண்டுகளில் பாரதி – பாலா காதல் அந்த கல்லூரி முழுவதுமே அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபலமான செய்தியாக இருந்தது.
பாரதி மீது பாலா வைத்திருந்த காதல் மீது பாரதிக்கு மட்டும் அல்ல வேறு யாருக்கும் கூட சிறிதளவும் சந்தேகம் ஏற்பட்டது இல்லை. அவன் பாரதி தவிர மற்ற பெண்களிடம் தேவை இல்லாமல் பேசியதுக் கூட இல்லை.