“ப்ச்... எல்லோரும் ஒரே மாதிரி தான்... அழகா இருக்க... எங்க அம்மாக்கு பிடிச்சிருக்கு... அக்காக்கு பிடிக்குது... பணம் இருக்கு... ச்சே... யாராவது மனசுன்னு ஒன்னு இருக்குன்னு நினைக்குறாங்களா?”
“விவேக் அந்த மாதிரி நல்லவர் தான் பாரு...”
பாரதி பவித்ராவை பார்த்து முறைத்தாள்.
“என்ன அந்த மாதிரி? மதுவோட பர்த்டே பார்ட்டில, நீ அந்தப் பக்கம் போன உடனேயே வந்து ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்லிட்டு... நான் கொஞ்சம் கோபமா பேசிய உடனேயே கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சுன்னு சொல்றவன் எல்லாம் ரொம்ப நல்லவன் தான்...”
“என்ன?”
“ஆமாம் பவி... ஏற்கனவே அந்தப் பொண்ணை தான் கல்யாணம் செய்துக்கப் போறோம்னு அவருக்கு தெரியும் தானே... அப்புறம் எதுக்கு வேற ஒருத்தி கிட்ட வந்து இப்படி எல்லாம் பேசுறது...? இவங்க எல்லோரும் ஒரே மாதிரி தான் பவி...!!! இது எல்லாம் புரிஞ்சு இருந்தும், ஏன் இப்படி எனக்கு இந்த குழப்பம்னு தான் புரியலை...”
பவித்ரா உடனே பதில் சொல்லாது சிந்தனையில் ஆழ்ந்தாள். பின்,
“நான் சொல்றதை கேள் பாரு... நீ இப்படியே எவ்வளவு நாள் இருக்க முடியும்? இந்த மாதிரி தேவை இல்லாத குழப்பம் கேள்வி எல்லாம் எதுக்கு? உனக்குன்னு ஒரு குடும்பம் இருந்தால் இந்த குழப்பம் எல்லாம் போய்டும்...” என்றாள்.
“ஆனால், என்னுடைய பாஸ்ட் தான் ரொம்ப பிரபலமாச்சே...”
“அதெல்லாம் இந்தக் காலத்தில் பெரிய விஷயம் இல்லை... நீ மட்டும் சரின்னு சொல்லு, இவர் கிட்ட சொல்லி உனக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல அலையன்ஸ் பார்க்க சொல்றேன்...”