"நான் முன்பு எழுதின கதைப் பற்றி சொல்லி இருந்தேன்... அதை தான் கேட்கிறார்..." என்றாள் பாரதி அவசரமாக!
"நான் அப்படியே நம்பிட்டேன்..." என்று பவித்ரா சாதரணமாக சொல்வது போல் கேலி செய்யவும்,
மது,
"நீங்க கதை எழுதுவீங்களா, மேடம்?" என்று மிகுந்த ஆர்வத்துடன் பாரதியிடம் கேட்டாள்.
பவித்ராவை முறைத்து விட்டு, மதுவிற்கு மட்டும் பதில் சொன்னாள் பாரதி...
"இப்போ இல்லை மது... முன்னாடி... நான் காலேஜ் படித்தப் போது எழுதியது...." என்றப்படி தன் கைப்பையில் இருந்த கவரை எடுத்து மதுவிடம் கொடுத்தாள்.
"மேடம், அண்ணா படிச்ச பிறகு நானும் படிக்கலாமா???"
"இது என்ன கேள்வி, மது... படிக்கலாம்... கட்டாயம் படிக்கலாம்... பாரதி என்ன காதல் காவியமா எழுதி இருக்க போறா, ஏதாவது புரட்சிகரமான கதை தான் இருக்கும்...." என்றாள் பவித்ரா.
பாரதி மீண்டும் முறைப்பதை கண்டுக்கொள்ளாது, கடிகாரத்தை பார்த்து விட்டு,
"சரி மது, எங்களுக்கு லேட் ஆகிடுச்சு, நாங்க கிளம்புறோம்..." என்றாள் பவித்ரா.
மதுவும் அவர்களிடம் விடை பெற்று கிளம்பினாள்.
பேருந்தில் ஏறி அமரும் வரை பவித்ரா அமைதியாகவே இருந்தாள். அதற்கு பின்பும் அவள் எதுவும் பேசாது இருக்கவும் பாரதியால் அமைதியாக இருக்க முடியவில்லை...!