எல்லாவற்றிருக்கும் காரணம் ஆதித்யா தான். அவனுக்கு எதற்கு இந்த அதிகப்படியான கோபம்? கொஞ்சம் பொறுமையாக நடந்திருந்தால் எல்லாமே சரியாகப் போயிருக்கும்.
இப்போது அருமையான வாய்ப்பு கை நழுவி போகப் போகிறது! அவனின் எதிர்காலமே மாறப் போகிறது!
ஆதித்யாவை தனியாளாக ப்ரோட்டோடைப் செய்ய சொல்லலாமா?
திடீரென்று அலறிய போன் சான்வியின் யோசனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
யோசனையோடே அதை காதில் வைத்து "ஹலோ" என்றாள்.
"சான்வி? நீங்க தான் கூப்பிட்டீங்களா? நான் தப்பா நம்பர் சேவ் செஞ்சு வச்சுட்டேனான்னு பார்த்தேன்." விவேக்கின் குரல் எப்போதும் போல சாதாரணமாகவே மறுப்பக்கம் இருந்து ஒலித்தது.
ஒரு வினாடி சான்விக்குள் பேரும் நிம்மதி அலை பரவியது.
அவள் பதில் சொல்ல காத்திருக்காமல் விவேக்கே தொடர்ந்தான்.
"நான் போனை சைலன்ட்ல வச்சிருந்தேன். ரிங் ஆனது கேட்கலை. சொல்லுங்க, என்ன?"
அவன் ஈசியாக கேட்டு விட்டான். சான்வியால் இன்னமும் இயல்பாக முடியவில்லை!
அவள் பேசாமல் இருக்கவும், விவேக், "தப்பா என் நம்பரை போட்டுட்டீங்களா? அப்படி இருந்தா பரவாயில்லை, சொல்லிடுங்க. நான் ஒன்னும் நினைக்க மாட்டேன்!" என்றான்.
"இல்லை இல்லை அப்படி இல்லை. உங்களை தான் நான் கூப்பிட்டேன்." சான்வி தயக்கமாக இருந்தாலும் வேகமாக பதில் சொன்னாள்.