தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 16 - பிந்து வினோத்
16. என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்...
பவித்ராவிற்கு பாரதியின் அந்த திடீர் மாற்றம் குழப்பத்தை ஏற்படுத்தியது! ஆனால் பாரதி சொல்வதை, அதன் பின் இருக்கும் காரணத்தை ஊகிக்க முடிந்தது...
"இது என்ன பைத்தியக்காரத்தனம், பாரு? இப்படி எல்லாம் உளறாதே..." என்றாள் கண்டிப்பான குரலில்!
பெரிய விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் உடனடியாக புரிந்துக் கொண்ட தோழியின் கையை வாஞ்சையுடன் பற்றிக் கொண்ட பாரதி,
"இல்லை பவி, ஆண்கள் எல்லோரும் ஒரே மாதிரி தான்... ஒரு தடவைப் பட்ட அடியோட வடுவே இன்னும் போகலை...." என்றாள் கசப்புடன்!
"பைத்தியம் மாதிரி பேசாதே... அந்த பாலாவையும் விவேக்கையும் ஒரே மாதிரி வச்சு நீ யோசிப்பதே தப்பு...."
"ஏன், இப்போ அந்த பாலா என்னை விட்டுட்டுப் போனது தெரியும் என்பதாலா???? இதையே ஆறு ஏழு வருஷம் முன்பு நீ சொல்லி இருப்பாயா????"
"அன்னைக்கு சொல்லி இருப்பேனோ இல்லையோ, இப்போது சொல்றேன்... அவனை மாதிரி ஒரு ஸ்டுப்பிடை இன்னமும் நீ நினைவில் வைத்திருப்பது கூட தப்பு... அதுவும் விவேக் போல ஒரு ஜென்டில்மேன் கூட கம்பேர் செய்வது ரொம்பவே தப்பு...”
"ஆமாம் விவேக் ரொம்ப நல்லவர் தான்... நாங்க ஃபர்ஸ்ட் மீட் செய்த விஷயத்தைப் பத்தி யோசிக்காமல் பேசுற பவி...."
"அது கோபத்தில் செய்தது, பாரு... கோபம் என்பது இயற்கையாக எல்லோருக்கும் வருவது தான்... விவேக் பக்கம் இருந்து யோசிச்சுப் பார், உன்னை ஹீரோவா நினைக்கும் தங்கை முன் யாராவது அப்படி பேசினால் உன்னால உடனே அக்ஸப்ட் செய்துக்க முடியுமா???"
"ம்ம்ம்ம்...."