அதனால் அதற்கு மேல் ரமேஷ் தோண்டித் துறுவ தேவை இருக்காமல், மேலோட்டமாக தனக்குத் தெரிந்ததையும், அன்று மாலையில் பாரதியிடம் பேசியது வரை என அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
பவித்ரா சொன்னதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ரமேஷ், அவள் பேசி முடித்தப் பின், உடனே எதுவும் சொல்லவில்லை. நெற்றியை தேய்த்துக் கொண்டு யோசனையில் இருந்தான்... பவித்ராவும் அவனே பேசட்டும் என்றுக் காத்திருந்தாள்...
சில நிமிடங்களுக்குப் பிறகு,
"இந்த விவேக் எப்படிடா???" என மனைவியிடம் கேட்டான் ரமேஷ்.
"நல்லவரா தான் தெரியுறார்... அவங்க குடும்பமே ரொம்ப நல்ல குடும்பம்..." என்றாள் பவித்ரா!
"மேலோட்டமா தெரிவதைப் பார்த்து நம்ப முடியாது... நான் எதற்கும் விவேக் பத்தி விசாரிக்குறேன்..."
"ம்ம்ம்ம்...."
"நீ விவேக் பத்தி இன்னைக்குப் பேசும் வரைக்கும் பாரதிக்கே தன்னுள் ஏற்பட்டிருந்த மாற்றம் புரியலை தானே??? ஒரு விதத்தில் பார்க்கப் போனால் விவேக் அதைத் தான் செய்றார்னு நினைக்கிறேன்..."
"ம்ம்ம்ம்... அப்படி தான் நினைக்கிறேன்..."
"நல்லவர் போல தான் தோணுது... இருந்தாலும் பார்ப்போம்... ஆனால் ஞாபகம் வச்சுக்கோ டார்லிங்... இன்னொருத் தடவை இதுப் போல் பாரதியைக் குழப்பாதே.... அப்புறம் அவள் எப்போதும் இப்படியே இருக்க வேண்டியது தான்..."