வினாடிகளை கழிப்பது கூட அவனுக்கு கொடுமையாக இருந்தது. வெளியே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவனின் அருகில் யாரோ வரும் அரவம் உணர்ந்து அவசரமாகத் திரும்பினான். ஆனால் என்ன ஏமாற்றம்!!!!
"ஹலோ சார்... பாரதி அக்கா பார்க்க வந்தீங்களா? அவங்க வெளியே போயிருக்காங்க... ஏதாவது சொல்லனுமா?" என்றபடி அவன் முன்பே ஒரு முறை பார்த்திருந்த பாரதியின் ஹாஸ்டல் தோழியான அந்த பெண் நின்றிருந்தாள்.
காலை நேரம்... மணி இன்னமும் பத்துக் கூட ஆகவில்லையே... அதற்குள் பாரதி எங்கே சென்றிருப்பாள் என்று வியந்தாலும், அதை நேரில் கேட்காமல் தவிர்த்தான் விவேக்.
"இல்லை... பெரிசா எதுவும் இல்லை... எப்போ வருவாங்கன்னு தெரியுமா?" என்று மட்டும் கேட்டான்!
"தெரியலையே சார்.... உங்கப் பேர் சொன்னால் நான் அவங்க கிட்ட சொல்றேன்...."
"விவேக்னு சொல்லுங்க அவங்களுக்குத் தெரியும்..."
"வேற ஏதாவது சொல்லனுமா சார்??"
"இல்லை வேண்டாம்... தேங்க்ஸ்..."
ஏமாற்றத்துடன் அங்கே இருந்து விவேக் கிளம்பிச் செல்வதை பார்த்து விட்டு, சித்ரா அவசரமாக மாடியில் உள்ள பாரதியின் அறைக்கு வந்தாள்.
"பாரதி அக்கா, அன்னைக்கு பார்த்த அவரே தான்... பேர் விவேக்காமே...."
அவள் சொல்வதைக் கேட்ட பாரதி, எதுவும் சொல்லாது அமைதியாக இருந்தாள்.
"நீங்களே பிடிக்கலை வராதீங்கன்னு சொல்லி இருக்கலாம் தானே க்கா? பாவம் அவர்...."