தொடர்கதை - உன் காதல் இருந்தால் போதும் - 01 - பிந்து வினோத்
பல நாட்களாகப் பார்க்க ஆசைப் பட்ட திற்பரப்பு அருவியைக் கண்கொட்டாமல் பார்த்து ரசித்தாள் சௌந்தர்யா.
அருவி அழகு என்றால், கொட்டி முடித்து கோதை ஆறாக ஓடும் அந்த நீரின் அழகு கண் கொள்ளாத காட்சியாக இருந்தது!
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே,
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு?
மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்,
வழியுது வழியுது வெள்ளை அருவி,
அருவியை முழுவதும் பருகிவிட,
ஆசையில் பறக்குது சின்னக்குருவி,
பழைய ‘ஆசை’ திரைப்படப் பாடலை தானாக அவளின் இதழ்கள் முனுமுனுத்தது!
தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக் கொண்டிருந்த தோழிகளில் ஒருத்தியின் பார்வை இவள் பக்கம் விழுந்தது.
“ஹேய் பார்த்துடி, சௌந்தர்யா! அப்படியே அருவியை விழுங்கிடுவ போல இருக்கே. பார்த்தது போதும் வா வா நாம எல்லோரும் ஒன்னா போட்டோ எடுக்கலாம்!”
“ப்ச்... எனக்கு போட்டோ எல்லாம் வேண்டாம். நீங்க எடுத்துக்கோங்க!” என்றாள் சௌந்தர்யா.
“ஒரு ஞாபகத்துக்காக தானேடி, வா...”
“எனக்கு என் கண்ணு தான் கேமரா, அதை இமை எனும் ஷட்டர் வச்சு மூடாமல் நான் இந்த சீனரியை பார்த்துட்டே இருப்பேன்”
“உனக்கு கிறுக்குப் பிடிச்சிருக்கு, ஒழுங்கு மரியாதையா வா...”