தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
01. சட்டென்று சலனம் வரும் என்று ஜாதகத்தில் சொல்லலையே...
சஞ்சீவ் தயாராகி மாடியில் இருந்து இறங்கி வந்தான்.
"அண்ணி அண்ணி... ரெடியா?"
"ரெண்டு நிமிஷம், சஞ்சீவ் " என்று கீதா தன் அறையில் இருந்து குரல் கொடுத்தாள்.
ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்த சஞ்சீவின் அன்னை காஞ்சனா, காலை எட்டு மணிக்கே அதிசயமாக எழுந்ததோடு மட்டும் அல்லாமல், வெளியே செல்ல வேறு தயாராக இருந்த தன் இரண்டாம் மகனை அதிசயமாகப் பார்த்தாள்.
ஜீன்ஸ், டீ ஷர்ட், கலைந்த முடி என்று இருந்தாலும் சஞ்சீவ் ஹான்ட்சம் ஆக இருந்தான்! அவனின் ஆறடி உயரம் அவனுக்கு தனிக் கம்பீரத்தை கொடுத்தது!
"என்னடா சஞ்சீவ், அதிசயம்... ஒன்பது மணிக்கு முன்னாடி பெட்ல இருந்து அசையவே மாட்ட... இப்படி எட்டு மணிக்கே ரெடியாகி இருக்கிற?" என்று மகனிடமே கேட்டாள் காஞ்சனா.
காஞ்சனா பழையக் காலத்து மனுஷி என்று பறை சாற்றுபவள் போல சேலைக் கட்டி, நெற்றியில் விபூதியுடன் இருந்தாள். அவளின் வயது ஐம்பதுகளில் இருந்தாலும், இந்த 'கெட்டப்' அவளின் வயதை அதிகப் படுத்திக் காட்டியது!
"என்னம்மா செய்யறது... என்னோட ஹாஸ்பிட்டல்ல இன்னைக்கு வெளிநாட்டுல இருந்து சில ஸ்பெஷலிஸ்ட்ஸ் வர்றாங்க... என்ன தான் எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லைன்னாலும் ஒரு எம்-டி யா நான் போகலைன்னா நல்லா இருகாதில்லை? அதான் அண்ணியை சீக்கிரம் எழுப்பி விட சொன்னேன். அண்ணியும் எங்கேயோ போகணும்னு..." என்று சஞ்சீவ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே காஞ்சனா குறுக்கிட்டுப் பேசினாள்.
"அது எனக்கு தெரியும்டா... உன் அண்ணி என் கிட்டே சொல்லாம எதுவும் செய்யவும் மாட்டா...