தொடர்கதை - உன் காதல் இருந்தால் போதும் - 03 - பிந்து வினோத்
சௌந்தர்யாவைப் போலவே 'அவனும்' திகைத்துப் போய் தான் நின்றிருந்தான்...
ஆனால், தொடர்ந்த வினாடிகளிலும் சௌந்தர்யா அதிர்ந்தே நிற்க, அவனோ அப்படி இல்லாமல் திகைப்பில் இருந்து வெளி வந்து வியப்புடன் அவளை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றான்...
அவர்கள் இருவரின் திகைப்பை கவனிக்காமல்,
“சௌந்தர்யா நான் போன்ல சொன்னேனே அவர் இவர் தான். பேரு சதானந்தன்! என்னுடைய சொந்தக்காரர் தான். எங்க குடும்பத்துக்கு இவர் ஃபேமிலி நிறைய ஹெல்ப் செய்திருக்காங்க. ஆனால், அவங்க யாரும் இதுவரை எந்த ஹெல்ப்பும் கேட்டதில்லை. முதல் முறையா ஒரு ஹெல்ப் கேட்டு இருக்கார். நீ தான் எனக்காக ஹெல்ப் செய்யனும்...” என்று தோழியிடம் சொன்னாள் ஷீலா.
சௌந்தர்யா இன்னமும் திகைப்பில் இருந்து முழுவதுமாக வெளி வராமலே நின்றிருந்தாள்...
ஷீலா மனதில் கேள்விகள் தோன்றும் முன் சௌந்தர்யாவை இயல்புக்கு திருப்பி விட விரும்பியவனாய்,
“ஹலோ!” என புன்னகையுடன் கையை நீட்டினான் அவன்... சதானந்தன்!
ஏற்கனவே திகைத்துப் போய் நின்றிருந்த சௌந்தர்யாவை, அந்தப் புன்னகை கிறுகிறுக்க வைத்தது...
அவன் யார் என்ன எதுவும் தெரியாது... குணநலன்கள் தெரியாது... படித்திருக்கிறானா, என்ன செய்கிறான், எதுவும் தெரியாது...
ஆனால் அவனைப் பார்த்த உடன் அவளுள் தடுமாற்றம்...