தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 19 - பிந்து வினோத்
19. என்னை தோற்றுவிட்டு வெட்கத்தில் தலை குனிந்தேன்...
பவித்ரா குழம்புவதை தெரிந்தோ தெரியாமலோ, கிளம்பும் போது, மற்றவர்களிடம் விடை பெற்று விட்டு, விவேக் அவளிடம் வந்து,
"சிஸ்டர், எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் செய்ங்க... உங்க தோழியே வந்து என்னைப் பற்றி பேசினால் நீங்களும் பேசுங்க, மற்றபடி முடிந்த அளவு என் பேச்சை எடுக்காதீங்க...." என்றான்.
பவித்ரா புன்சிரிப்போடு சரி என்றாள்.
“அப்புறம் இன்னொரு விஷயம் சிஸ்டர்... நானும் பாரதியும் மீட் செய்த முதல் நாள் நீங்களும் இருந்தீங்க தானே? அன்னைக்கு நடந்ததற்கும் பிறகு மீட்டிங்கில் நடந்ததற்கும் நான் ரொம்பவே வருத்தப் பட்டேன் சிஸ்டர்... இன்னொரு முறை உங்க ப்ரெண்ட் அது போல் வருத்த பட விட மாட்டேன்... என்னைக்குமே அவங்க சந்தோஷம் ஒன்று தான் எனக்கு முக்கியம்..."
மெல்லிய கரகரப்பான குரலில் ஆனால் தெளிவாக, தீர்மானத்துடன் அவன் சொன்னதை கேட்டு பவித்ராவின் மனம் தெளிவானது. ஒருவரின் மனதில் இருப்பதை அறிய முடியாது தான். ஆனால் ஒருவர் பேசும் தோரணையில், அவர்களின் கண்ணில் தெரியும் அந்த உண்மை பண்பில் ஓரளவிற்கு மனிதர்களை எடை போடலாம். விவேக் உண்மையாகவே பாரதியை விரும்புகிறான். அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்வான் என்று அந்த வினாடியில் அவளுக்கு உறுதியான நம்பிக்கை ஏற்பட்டது.
*************
பாரதி விவேக்கை சந்தித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகி இருந்தது. இரண்டு வாரங்கள் அவளை காண விடுதிக்கு வந்தவன் அதன் பின் இரண்டு வாரங்களாக வரவில்லை. அதே போல் மதுவிற்கு பரீட்சை நடந்த அந்த சில நாட்களும் அவளை அழைத்து செல்ல அவன் வரவில்லை. அவனை சந்திக்காதிருப்பது தான் அவள் விருப்பம் என்ற போதும், அவன் வரவில்லை என்பதும் அவளுக்கு சந்தோஷத்தை தரவில்லை.
அவளின் மனநிலை உணர்ந்து, விவேக்கை சந்திப்பதை தவிர்த்தது சரி தான் என்று அவளின் மூளை சொன்னது. ஆனால் மனம் தான் ஏற்க மறுத்தது. சரி பார்க்க தான் முடியவில்லை,