தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 23 - பிந்து வினோத்
23. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
"என்ன பாரதி சொல்ற?" என்றாள் உமா தன் அதிர்ச்சியை மறைக்காமலே!
அவளை பார்த்து தலை அசைத்த பாரதி கற்பகத்திடம்,
"ஆமாம் மேடம், நான் சீரியஸா தான் சொல்றேன். என் அப்பா முன்பு இன்வெஸ்ட் செய்த பணம், அவர் நண்பர் கிட்ட அப்படியே இருக்கு... அப்பாக்கு அந்த பணம் வாங்க விருப்பமில்லை... எனக்கும் கூட அதில் ஆர்வமில்லை... அங்கிள் அப்பப்போ அதைப் பத்தி சொல்லி, கொஞ்சம் தொல்லை செய்வார், அவருக்காக ஏதாவது அநாதை இல்லம், இல்லை பெண்களுக்கான ஹோம் எதற்காவது டொனேஷனா கொடுக்கலாமான்னு யோசிப்பேன்.... ஆனால் அங்கிள் ஏத்துக்க மாட்டார்... இது போல் புது தொழில் தொடங்குவதை விட வேற என்ன பெரிய விஷயம் இருக்க முடியும்? நான் அந்த பணம் வாங்கி தரேன்... அதை நீங்க விகேக் சார் கிட்ட உங்க பணத்தை தருவது போல் கொடுங்க. அப்போ அவருக்கு இந்த பழைய விஷயம் எல்லாம் தெரிய வேண்டி இருக்காதே... விவேக் சார் உங்க எல்லோர் மீதும் ரொம்ப பாசம் வைத்திருக்கிறார். நீங்க உண்மையை சொன்னால் பாவம் அவரால் தாங்க முடியாது..." என்றாள் வேகமாக!
சற்று முன் பாரதியின் முகத்தில் தோன்றி இருந்த சிந்தனைக்கான காரணம் புரிந்து உமாவின் முகத்தில் புன்னகையும், மலர்ச்சியும் தோன்றியது.
கற்பகம், பாரதியின் பதிலை கேட்டு திகைத்து போய், வாயடைத்து அமர்ந்திருந்தாள்.
ஒரு சில வினாடிகள் அந்த இடத்தில் நிசப்தம் நிலவியது.
பாரதி மனதுக்குள் விவேக் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
கற்பகம், பாரதியின் எதிர்பாராத பதிலில் வாயடைத்துப் போயிருந்தாள். உமா என்ன சொல்வது என்றுப் புரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
இறுதியில் கற்பகமே அந்த அமைதியை கலைத்தாள்!