விசாரித்தாள்.
"இல்லை மேடம், அப்படி யாரும் இல்லை... என் அம்மா, அப்பா வழி உறவுகள் நிறைய இருக்கு. ஆனால் யாரும் இப்போது க்ளோஸ் இல்லை... இப்போதைக்கு எனக்கு நட்பு, உறவு எல்லாம், பவித்ரா, ரமேஷ் அண்ணா, அம்மா, நித்திலா தான்..."
"ம்ம்ம்ம்... அம்மா, அண்ணா ஆனால் பவித்ரா மட்டும் பவித்ராவா? அவளையும் அண்ணின்னு கூப்பிட வேண்டியது தானே?"
"ஆஹா, நீங்க வேற மேடம்... ஏதோ நீங்க என்பதால் தான் இப்படியாவது பேரை சொல்றா... வழக்கமா, வாடி போடி தான்..." என்றாள் பவித்ரா புன்னகை மின்ன!
"ஆமாம் உனக்கு மரியாதை ஒன்னு தான் குறைச்சல்.... உனக்கு டி போட்டு பேசுவதே கம்மி தான்..." என்று பாரதியும் உடனடியாக தோழிக்கு பதில் சொன்னாள்!
"சொல்வ, சொல்வ... ஏன் சொல்ல மாட்ட நீ...? இரு இரு, உனக்கு கல்யாணம் மட்டும் முடியட்டும், அப்புறம் அந்த அவர் கிட்ட சொல்லி உன்னை கவனிச்சுக்கிறேன்..."
"இதெல்லாம் நடக்க கூடிய விஷயமா, பவி???"
"நடக்கும் நடக்கும் நடக்காமல் என்ன? உன்னைப் பார்த்தால் ஓடினாலும் ஓடும்!"
அதுவரை இருந்த ஒருவிதமான இறுகிய சூழ்நிலை, தோழிகள் இருவரின் அரட்டைப் பேச்சில் கரைந்துப் போனது. கற்பகமும் உமாவும் கூட இவர்கள் இருவரின் கேலிப் பேச்சில் சேர்ந்துக் கொள்ளவும், பேச்சு கலகலப்பாக தொடர்ந்தது.
ஒருவரும் ஹோட்டல் அறைக்குள் திரும்பி வராததால், மது அவர்களை தேடிக் கொண்டு வரும் வரை நால்வரும் கதைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"இங்கே தான் எல்லோரும் இருக்கீங்களா? என்னை மட்டும் அம்போன்னு விட்டுட்டு வந்துட்டீங்க எல்லோரும்?" என்று புகார் செய்தாள் மது!