"ஆனால் பாரதி, இவ்வளவு பெரிய தொகையை, விவேக்கிற்கு கொடுக்க நீ முன் வர காரணம் என்ன?" எனக் கேட்டாள்.
அதுவரை எல்லா கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் சொன்ன பாரதி, இந்த கேள்விக்கு பதில் சொல்ல தடுமாறினாள். உண்மையில் அவளுக்கே அதன் காரணம் புரியவில்லை. அவளின் தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் கண்டுக் கொண்ட கற்பகம்,
"இல்லை, விவேக்கை அவ்வளவா உனக்கு தெரியவும் தெரியாது... ஆனால், அவனுக்காக சப்போர்ட் செய்து பேசுற, இப்போது பணமும் தரேன்னு சொல்றீயே... இந்தக் காலத்தில் ரொம்ப நெருங்கிய நண்பர் உறவினற்கு கூட பண உதவி செய்ய எல்லோரும் யோசிப்பாங்க..." என தன் கேள்விக்கான காரணத்தையும் சொன்னாள்.
பாரதிக்கு என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியவில்லை. அவர்கள் இருவரின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த உமா,
"அத்தை, பாரதிக்கு விவேக்கை நல்லா தெரியாது... ஆனால், அவளுக்கு விவேக்கை பிடிக்கும்..." என்று சொல்லி பாரதியை திகைக்க வைத்தவள்... உடனே,
"இல்லை... அவருடைய எதிக்ஸ், புது பிஸ்னஸ் ஐடியா எல்லாம் பிடிக்கும். இந்த ஐடியா பத்தி முன்பே ஒரு தடவை விவேக் சொல்லி இருக்கார்னு சொன்னாள்..." என்று மாற்றி விட்டு, பாரதியை பார்த்து கேலியாய் ஒரு புன்னகை சிந்தினாள் உமா.
பாரதிக்கு உமாவின் கேலி புரிந்த போதும், வழக்கமான முறையில் முகத்தில் எந்த மாற்றத்தையும் காட்டாதிருந்தாள். மற்றவர்களைப் போலவே கற்பகத்திற்கும் ஒரு விஷயம் புரிந்தது. பாரதிக்கு விவேக்கின் மேல் மதிப்பு இருக்கிறது, பரிவும் இருக்கிறது... ஆனால் காதல் இருக்கிறதா தெரியவில்லை... அப்படியே இருந்தாலும் பாரதி அதை ஒத்துக் கொள்வது கடினம் தான்!!!
கற்பகத்திற்கு பாரதி மீதான ஆர்வம் அதிகமானது!