குடும்பத்தில் ஒருவனாக இனிமையாக பழகியதை சொன்னாள்.
"ஒரே நாள், ஒரு சில மணி நேரத்தில் அவர் குடும்பத்தில் ஒருத்தர் போலாகி விட்டார், பாரு... எந்த பந்தாவும் இல்லாமல் அவர் பழகியதை பார்த்தே அவருடைய குணம் புரிந்து விட்டது... அத்தை உன்கிட்ட பேசுறேன்னு சொன்னாங்க, ஆனால் அவர் அதற்கு சம்மதிக்கலை, நானே பேசி பாரதி என்னிடம் நேராக சம்மதம் சொல்வது தான் என் விருப்பம்ன்னு சொல்லிட்டார்... அது மட்டும் இல்லை, என்னிடம் அன்று ஒரு விஷயம் சொன்னார்... என்ன தெரியுமா, உங்க ப்ரெண்டை இனிமேல் எந்த காரணத்திற்காகவும் வருத்தப்பட விட மாட்டேன்... உன் சந்தோஷம் தான் அவருக்கு முக்கியம்னு சொன்னார்... அந்த வினாடியே, விவேக் தான் உனக்கு ஏற்ற துணை என்ற எண்ணம் எனக்கு வந்தாச்சு... நீயே யோசித்து பார், ஒவ்வொரு விஷயத்திலும் உனக்கு தான் அவர் முன்னுரிமை கொடுத்திருக்கிறார்... நீ ஹாஸ்டலில் இருந்துக் கொண்டே இல்லைன்னு சொல்ல சொன்னது தெரிந்த போதும் அவர் ஏன் கோப படலை? பணம் தான் அவருக்கு முக்கியம்னா, அவருக்கு உன்னை விட பணக்கார பொண்ணுங்க கிடைக்க மாட்டாங்களா என்ன?"
பவித்ரா சொன்னதைக் கேட்டு பாரதியின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டது. பவித்ரா பேச்சை நிறுத்தவும், உமா தொடர்ந்தாள்.
"பவித்ரா சொல்வது சரி தான், பாரதி.., விவேக் உன் மேல் ரொம்ப அன்பும், மதிப்பும் வைத்திருக்கிறார். அன்று அத்தைக்கிட்ட உன்னை பற்றி சொன்ன போது, அவர் குரலில் இருந்த நம்பிக்கையை நீ கேட்டிருக்கனும்... அவ்வளவு ஏன், மதுவிற்கு துணையாக ஒரு ஆள் வேண்டும் என்ற காரணத்திற்க்காக அவசரமாக எங்கள் கல்யாணம் நடந்ததையே அப்பப்போ கமெண்ட் செய்பவர், மதுவிற்காக என்று சொல்லி உன்னிடம் ப்ரொபோஸ் செய்தார் என்றால் பார்த்துக் கொள், எப்போதே அவர் மனம் உன்வசம் வந்து விட்டது என்பதை..."
தோழியின் முகத்தைப் பார்த்த பவித்ரா,
"குட், இப்போ தான் முகத்தில் ஏதோ கொஞ்சம் பரபரப்பு தெரியுது... இப்போ தான் நிஜமான கல்யாண பொண்ணு போல இருக்க...." என்றாள்.