மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 15 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
சவீதா அவர்கள் இருவரையும் வரவேற்று அமர சொல்லி விட்டு, சத்யாவிடம்,
“உன்னைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு சத்யா. இன்ஸ்பெக்டர் எப்படி இருக்கார்? இப்போவாவது காய்கறி வாங்கவாவது உன்னை வெளியே அனுப்புறாரா இல்லையா? இப்போவும் சின்னத்தம்பி குஷ்பூ போல தான் உன்னைப் பார்த்துக்குறாரா???” என்றுக் கேட்டாள்.
பக்கத்தில் இருந்த சக்தி சிரிப்பதை கடுப்புடன் பார்த்து முறைத்து விட்டு சவீதாவிற்கு பதில் சொன்னாள் சத்யா.
“அவர் எப்போவும் போல இருக்கார் சவீதா. இவங்க என் ஃபிரென்ட், நம்ம ஊருக்கு புதுசா வந்திருக்காங்க. பேரு சக்தி.” சக்தியை சுருக்கமாக சவீதாவிற்கு அறிமுகம் செய்தாள் சத்யா.
சவீதா சக்தியை பார்த்து புன்னகைத்ததை தாண்டி அதிக ஆர்வம் காட்டவில்லை. அதற்கு மாறாக சத்யாவிடம்,
“சரி, சரி! அதென்ன அந்த வீட்டு கேட்டை திறக்க போன?” என விசாரித்தாள்.
சக்தியும், சத்யாவும் காதுகளை கூர்மையாக்கி கொண்டார்கள்!
“அது அஹல்யா டீச்சர் வீடு தானே சவீதா? ஸ்கூல்ல ஒரு டேலன்ட் எக்ஸாம் இருக்குன்னு ஷாலினி சொன்னா. அதைப் பத்தி அவங்க கிட்ட கேட்க வந்தேன்.”
“அந்த அஹல்யாவை விட்டு தள்ளியே இரு சத்யா. அவ எல்லாம் நம்மளை மாதிரி இல்லை!” என வெறுப்புடன் சொன்னாள் சவீதா.
“என்ன, நீ போய் இப்படி பேசுற? ஊருல மத்தவங்க பேசுறதை தானே சொல்ற? நாம அந்த மாதிரி புரளி பேசுறவங்க இல்லையே?”
“உனக்குப் புரியலை சத்யா. அவ நடத்தை சரி இல்லை. அது மட்டுமில்லை, கொலையும் செஞ்சவ!”