“திரும்ப திரும்ப சொல்ல இது நல்ல விஷயம் இல்லை. இருந்தாலும் சத்யாவோட ஃபிரெண்ட் நீங்க. அதனால உங்க கிட்ட சொல்றேன்.
போன வருஷம் தீபாவளி நேரம். கடைசி நிமிஷ ஷாப்பிங் முடிச்சிட்டு திரும்பி வந்தோம். பசங்களை என் அம்மா வீட்டுல விட்டுட்டு நானும் அவரும் மட்டும் ஷாப்பிங் போயிருந்தோம். அவரு காருல இருந்து கவர் எல்லாம் எடுத்துட்டு இருந்தார். அப்போ ரோட்டுல சத்தம் கேட்டுச்சு. மணி கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆச்சு. நாங்க வந்தப்போ ரோட்டுல அரவமே இல்லை. கார் நிறுத்தின இடத்துல நாங்க லைட்டும் போடலை. இருட்டா தானே இருக்குங்குற தைரியத்துல வெளியே போய் எட்டிப் பார்த்தேன்.
ஸ்ட்ரீட் லைட் வெளிச்சத்துல அந்த சேகரன் குடிப் போதையில தள்ளாடிட்டே எதிர் வீட்டு காம்பவுன்ட் மேல சாய்ச்சு வச்சிருந்த பைக் எடுக்க போயிட்டு இருந்தது தெரிஞ்சது. அஹல்யா கேட் பக்கத்துல அவன் போறதை பார்த்து நின்னுட்டு இருந்தா. அவ இருந்த கோலம்! அதை ஏன் கேட்குறீங்க. தலை முடி எல்லாம் பிரிஞ்சு கலைஞ்சு போய் இருந்துச்சு. போட்டுருந்த ட்ரெஸ் எல்லாமும் கலைஞ்சு போயிருந்துச்சு. முகம் எல்லாம் எப்படியோ இருந்துச்சு. சேகரன் பைக்கை கிளப்பி அஹல்யா பக்கத்துல எடுத்துட்டுப் போய் ‘நாளைக்கும் இதே நேரம் வருவேன் டார்லிங்’ன்னு சொன்னது எனக்கு தெளிவா கேட்டுச்சு. அதே நேரத்துல சேகரன் பைக் லைட், எங்க வீட்டு பக்கம் திரும்ப அஹல்யா, சேகரன் இரண்டுப் பேருமே நான் அங்கே நின்னுட்டு இருந்ததை பார்த்துட்டாங்க. அவன் அடுத்த செகன்டே பைக்குல ஓடிப் போயிட்டான். அஹல்யாவும் ஷாக் ஆயிட்டு உள்ளே போயிட்டா.
அது வரைக்கும் நான் அவளை தப்பா நினைச்சதே இல்லை. அன்னைக்கு கூட குழப்பம் இருந்துச்சு. அப்புறம் இன்னும் இரண்டு தடவை இதே மாதிரி நடுராத்திரி அவங்களைப் பார்த்தேன். அவ தப்பான ஆளுன்னு அப்போ தெளிவா புரிஞ்சுப் போச்சு.”
சவீதா அருவெறுப்புடன் சொல்லி முடித்தாள்.
சக்தி சத்யா என்ன செய்கிறாள் என்றுப் பார்த்தாள். சத்யா குழப்பம் அப்பிக் கொண்ட முகத்துடன் தளர்ந்துப் போனவளாக அமர்ந்திருந்தாள்.