அவன் பதில் சொல்வதற்கு முன், தூரத்தில் போலீஸ் காரின் சைரன் கேட்டது.
🌼🌸❀✿🌷
“காலம் கெட்டுப் போச்சு சக்தி. நீ இல்லாம போயிருந்தா என் நிலைமை என்னவா இருக்கும். இப்படி எவனாவது வந்தா அடிக்க அங்கங்க கொம்பு வச்சிருக்கேன். இருந்தாலும் என்னால ஒன்னும் செய்திருக்க முடியாது!”
புலம்பிக் கொண்டிருந்த பாட்டியின் பக்கத்தில் அமைதியாக யோசித்தப் படி உட்கார்ந்திருந்தாள் சக்தி.
யார் அவன்? எதற்காக வந்தான்? அவனுடைய பேச்சைப் பார்த்தால் திருடன் போல தெரியவில்லையே?
மாடியில் இருப்பவர்கள் கீழே வரும் சத்தம் கேட்டது.
தென்றல்வாணன் விலங்கிட்டு அழைத்து வருபவனை கவனத்துடன் பார்த்தாள் சக்தி.
அவள் கொடுத்த அடியின் புண்ணியத்தில் அவனுடைய இடதுக் கண்ணை சுற்றி வீங்கி, ரத்தம் கட்டி இருந்தது. உயரமாக இருந்தவன், பார்ப்பதற்கு மென்மையாக தெரிந்தான்.
இவன் மாடி ஜன்னல் வழியே குதித்து உள்ளே வந்தான் என்று நம்புவது கஷ்டம்.
இருட்டில் தெரியாமல் இருக்கவோ என்னவோ கறுப்பு சட்டையும், பேன்ட்டும் அணிந்திருந்தான். கறுப்பு பெல்ட், கறுப்பு ஷூஸ் வேறு!!!
அந்த ஷூக்களின் பளபளப்பு அவன் சராசரி திருடன் இல்லை என்று சக்திக்கு முன்பு தோன்றியதை மீண்டும் உறுதி செய்தது.
“சக்தி, கேர்ஃபுல்லா இருங்க. அந்த உடைஞ்சிருக்க ஜன்னலை சீக்கிரம் ரிப்பேர் செய்திருங்க.