மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 28 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
அஹல்யாவின் பதற்றத்தை சக்தி கண்டுக்கொண்டாள். எனவே,
“நீங்க தப்பு செய்யலைனா பயப்பட ஒண்ணுமில்ல அஹல்யா,” என்றாள் அவளை தேற்றும் விதத்தில்.
“என்னை சுத்தி என்ன நடக்குதுன்னே புரியலை. ஏன் நடக்குதுன்னும் தெரியலை,” என்றாள் அஹல்யா மெல்லியக் குரலில்.
“ஒன்னும் பயப்படாதீங்க டீச்சர். அந்த சேகரன் விஷயத்தை சக்தி டீல் செய்வா. நீங்க தைரியமா இருங்க,” என சத்யாவும் அஹல்யாவிற்கு தைரியம் சொன்னாள்.
அவர்கள் இருவருக்கும் என்ன தெரியும், என்ன தெரியாது என்ற குழப்பம் அஹல்யாவின் முகத்தில் வந்தது. சக்தியால் அவளுடைய மனதில் ஓடும் குழப்பதை தெளிவாக படிக்க முடிந்தது.
“கொஞ்சம் பேருக்கு எதுவோ மொட்டைக் கடிதாசி வந்ததா பேசிக் கிட்டாங்களே, உங்களுக்கும் வந்துச்சா?” சக்தி அஹல்யாவின் முகத்தை தன்னுடைய கூர்விழிகளால் பார்த்துக் கொண்டு கேட்டாள்.
அஹல்யா உடனே பதில் சொல்லாமல் அபினவைப் பார்த்தாள். ஃபோனில் நம்பர் டையல் செய்துக் கொண்டிருந்த அபினவ் ‘சொல்” என்று சொல்லும் விதத்தில் தலையை அசைத்தான்.
“ஆமாம் வந்துச்சு,” என்றாள் அஹல்யா.
“அந்த லெட்டரை நாங்க பார்க்கலாமா?”
“நேத்து இன்ஸ்பெக்டர் வந்தப்போ அவர் கிட்ட கொடுத்துட்டேன்.”
“பரவாயில்லை,சரியா தான் செஞ்சிருக்கீங்க அஹல்யா. அதுல என்ன எழுதி இருந்துச்சுன்னு ஞாபகம் இருக்கா?”