“இன்ஸ்பெக்டர் சார் வரச் சொல்லி இருந்தார்.” அஹல்யாவின் குரலை தெரிந்துக் கொண்டு எட்டிப் பார்த்தான் தென்றல்வாணன்.
“அஹல்யா, வாங்க நான் இங்கே தான் இருக்கேன்.”
அஹல்யா அவன் அறைக்கு வரவும் அவளின் பின்னே, சக்தி, சத்யா, அருணும் வந்தார்கள்.
மனைவியை அங்கே பார்த்து அதிர்ந்துப் போனான் தென்றல்வாணன். அவனுடைய கண்கள் கோபமாக அவளைப் பார்த்து முறைத்தது.
“உட்காருங்க, ஒன் மினிட்...” என்று அஹல்யாவிடமும், சக்தியிடமும் பொதுவாக சொன்ன தென்றல்வாணன், சத்யாவிடம் தன்னை தொடருமாறு கண்களால் சைகை செய்து விட்டு நடந்தான்.
சத்யாவும் அவனை தொடர்ந்தாள்.
“இங்கே என்ன செய்துட்டு இருக்க சத்யா?” கோபத்துடன் வார்த்தைகளை கடித்து துப்பினான் தென்றல்வாணன்.
“உங்களுக்காக தான் வந்தேன்,” என்றாள் சத்யா அமைதியாக.
“எனக்காக வந்தீயா?? என்ன சொல்ற? இது விளையாட்டு விஷயம் இல்லை சத்யா. இன்வெஸ்டிகேஷன், அதும் மர்டர் இன்வெஸ்டிகேஷன். நீ இப்படி அஹல்யா கூட வரது சரியில்லை!”
“எனக்குத் தெரியாதா? இது வரைக்கும் இப்படி எல்லாம் செய்திருக்கேனா???”
“இப்போ மட்டும் என்ன? நம்ம வீட்டுக்கு ஒருத்தர் வந்திருந்தாரே, அவர் எங்கே?”