“ரொம்ப நேரம் இழுக்காதீங்க... நான் கீழே வெயிட் செய்றேன்... சீக்கிரம் வாங்க...”
புன்னகையுடன் மாடியில் இருந்து இறங்கி வந்த பாரதி, உமாவும் நித்யாவும், ஹாலின் பக்கவாட்டில் இருந்த சிறிய தோட்டத்தில் இருப்பதை கவனித்து, அங்கே சென்றாள். சித்தியை பார்த்த உடன் நித்யா பொக்கை வாயை காட்டி சிரித்தாள். கூடவே, கைகளை கால்களை அசைத்து தன் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தினாள். உமாவின் கையில் இருந்து அவளை இயல்பாக வாங்கிய பாரதி,
“என் செல்ல குட்டிக்கு என்ன சந்தோஷம்? அம்மா அதிசயமா உன்னை தூக்கி வச்சிருக்காங்கன்னா?” எனக் கேட்டு உமாவை கேலி செய்தாள்!
“பாரதி!?”
“பாருடா குட்டி, உண்மையை சொன்னால் உன் அம்மாக்கு எவ்வளவு கோபம் வருதுன்னு...”
“ஹுஹும்... உனக்கு பவித்ரா தான் சரி..!”
“அப்படி எல்லாம் இல்லை உமா. பவி வீட்டுக்குப் போனா நானும் அம்மாவும் சேர்ந்து அவளை தான் எப்போவும் கலாய்ச்சிட்டு இருப்போம்... வெளியே வந்தா மட்டும் தான் மேடம் என்னை ஏதாவது சொல்றது எல்லாம்...”
“ஓஹோ!”
“உங்களுக்கு அவளைப் பத்தி தெரியாது... அண்ணா எப்போவும் அவ முந்தானையை பிடிச்சிட்டு அவ பின்னாடியே தான் சுத்திட்டு இருப்பார்... மூணு வருஷமாவே அப்படி தான்... நீங்க தான் அவக் கிட்ட அப்பப்போ ஃபோன்ல பேசுவீங்களே, கேட்டுப் பாருங்க...”
“கட்டாயம் கேட்கனும்! அப்படி என்ன சொக்குப்பொடி போட்டாங்கன்னு கேட்டு தெரிஞ்சு வச்சுக்கலாமே... இவர் கல்யாணமான நாள் முதலே இப்படி ஆஃபிஸே கதின்னு தான் இருக்கார்...”