“ஆச்சர்யமா?”
“ம்ம்ம்... பொதுவா பவி தான் இப்படி ப்ளேட் போடுவா. ஒருவழியா அவக் கிட்ட இருந்து தப்பிச்சாச்சுன்னு பார்த்தால், அவ உங்களை நல்ல சூப்பரா ட்ரெயின் செய்து வச்சிருக்கா போல இருக்கே...”
“நான் பேசுறது உனக்கு ப்ளேட் போல இருக்கா?”
உமா பொய்யான கோபத்தோடு கேள்வி கேட்கும் போது, கிளம்பலாமா என்ற கேள்வியோடு விவேக் அங்கே வந்து சேர்ந்தான். நித்யாவை உமாவிடம் கொடுத்து 'பை' சொல்லிவிட்டு, உமாவிடமும் விடை பெற்று கணவனுடன் கிளம்பினாள் பாரதி.
விவேக் ஹாலில் இருந்த பெற்றோரிடம் கிளம்புவதாக சொல்லி விட்டு வாசல் பக்கம் சென்றான். அவனுடனே வந்த பாரதி, தன்னை கண்டும் காணாததுப் போல் இருந்த கற்பகத்தை கவனித்தாள்... அவளிடம் பிரத்தியேகமாக சொல்லாமல், பொதுவாக சொல்லி விட்டு கிளம்ப எழுந்த எண்ணத்தை உமாவின் பேச்சை மனதில் கொண்டு கஷ்டப்பட்டு அடக்கியவளாய்,
“போயிட்டு வரேன் மாமா... வரேன் அத்தை...” என்றாள்.
“பத்திரமாக போயிட்டு வாங்க,” என்ற மாமனாரின் பேச்சை விட, அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு முகத்தை திருப்பி கொண்ட மாமியாரின் மீதே கவனத்தை வைத்திருந்த பாரதியின் கவனத்தை மது கலைத்தாள்.
“கிளம்பியாச்சா சின்ன அண்ணி! எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?”
“உனக்கு என்ன வேணும் சொல்லு மது. அதையே வாங்கிட்டு வரேன்.”
“நீங்க என்ன வாங்கிட்டு வந்தாலும் எனக்கு ஓகே!”
“சரி மது... நானே உனக்கு கிஃப்ட் செலக்ட் செய்து வாங்கிட்டு வரேன்...”