பாரதி அறையை விட்டு வெளியில் செல்லும் வரை அவளையே பார்த்திருந்து விட்டு, மெதுவாக நடந்து சென்று மீண்டும் நாற்காலியில் அமர்ந்தான் விவேக். கையில் இருந்த ஃபோனை பார்த்தவனின் மனதில் மகிழ்ச்சியும், கவலையும், வருத்தமும் கலந்து தாண்டவமாடியது.
பாரதிக்கு முன்கோபமும் ரோஷமும் அதிகம் என்பதால், சொல்லாமல் அவளை அலைக்கழித்தால் அவள் கோபப்படுவாள், பதிலுக்கு அவனும் கோபப்பட்டு பெரிய சண்டையாக மாற்றலாம் என்று அவன் நினைத்திருந்தான். ஆனால் அவளோ அவனுக்காக என்று யோசித்து, அலைந்து மொபைல் ஃபோன் வாங்கி வந்திருப்பது அவனை நெகிழ வைத்தது.
டாக்டர் தாமஸ் சொன்னது போல் சர்ஜரி பற்றி கேட்கலாமா? இல்லை வேறு டாக்டரிடம் சென்றாவது கன்சல்ட் செய்து பார்க்கலாமா?
வேண்டாம்... அது இல்லை இப்போது முதலில் செய்ய வேண்டியது... பாரதியை அவனின் பிரிவுக்கு தயார் செய்வது தான் அவனின் முதல் வேலை... அதே போல் அண்ணனையும் அம்மா, அப்பா, மற்றும் மதுவை தனியாக கவனித்துக் கொள்ள தயார் செய்ய வேண்டும்...
ஒரு பெருமூச்சை வெளியேற்றிய விவேக், 'பாரதியின் அன்பில் உருகாமல், அவளின் வருங்காலம் நல்ல படியாக இருக்க, அவளிடம் கோபத்தைக் காட்ட எனக்கு சக்தி கொடு கடவுளே!' என மனதுள் வேண்டிக் கொண்டான்.
🌼🌸❀✿🌷
அன்று முதல் பாரதி மீண்டும் கல்லூரி பஸ்ஸில் கல்லூரி செல்வது வாடிக்கையானது. விவேக்குடன் கிடைக்கும் தனிமையான ஒரு சில மணித் துளிகள் இல்லாமல் போனதை தவிர அவளுக்கு அதில் வேறு எந்த வருத்தமும் இருக்கவில்லை. ஆனால் சில நாட்களாகவே விவேக்கை கண்ணில் பார்ப்பது கூட அவளுக்கு அரிதாகிப் போய் கொண்டிருந்தது. காலையில் எழுந்த உடன் அவனின் அலுவலக அறையில் நுழைந்துக் கொள்பவன், இரவில் எப்போது வீடு திரும்புகிறான் என்றே தெரிந்துக் கொள்ள முடிவதில்லை.