தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 53 - பிந்து வினோத்
53. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பாரதி விவேக்கிடம் சரியாக பேசியே பல நாட்கள் ஆகி இருந்தது... தப்பி தவறி அவன் அவளின் கண்ணில் பட்டாலும், அவளைப் பார்த்ததுமே தள்ளி சென்றான் அவன்... அவனின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று பாரதிக்கு இன்னமும் புரியவில்லை... குழப்பமாக தான் இருந்தது! அவள் அவனுக்கு பிடிக்காததுப் போல ஏதாவது செய்திருந்தாலும் கூட, என்னவென்று சொன்னால் தானே புரியும்? விலகி, விலகி செல்பவனை பிடித்து நிறுத்தி பேச பாரதி முயன்றாள்... ஆனால் விவேக்கிடம் இருந்து வெறுப்பு கலக்க வந்த கடுமையான பதில் தான் கிடைத்தது.
இப்படி எல்லாம் பாரதியிடம் யாரும் நடந்துக் கொண்டதும் இல்லை, பேசியதும் இல்லை... இருந்தாலும், அவளின் ஆனந்தை வெறுக்கவோ, அவனைப் போல் கடுமையாக பேசவோ ஏனோ பாரதியால் முடியவில்லை.
அன்று இரவு உணவு வேளையில், மனதில் குழப்பத்துடன் பாரதி உணவை விரல்களால் அளந்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்... விவேக்கை தவிர குடும்பத்தினர் அனைவருமே அங்கே இருந்தார்கள்... சில நாட்களில் வர இருந்த நரேந்திரன் - கற்பகம் திருமண நாள் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“விவேக் உங்க வெட்டிங் அனிவர்சரியை ரொம்ப கிராண்டா செலிபரேட் செய்ய ஆசை படுறான்ம்மா...” என்றான் நிரஞ்சன்.
“என் கிட்டேயும் சொன்னான்..." என மகனிடம் சொல்லி விட்டு, கணவரிடம், "நீங்க அன்னைக்கும் பிஸியா, இல்ல ஒரு நாள் எனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்க முடியுமா?” என்றுக் கேட்டாள் கற்பகம்.
“உனக்கு நான் எப்போ டைம் ஒதுக்காமல் இருந்திருக்கிறேன்? வேணும்னா ஒரு முழு வாரம் வீட்டிலேயே இருக்கேன்,” என்றார் நரேந்திரன்!
“ஹ்க்கும்... இந்த பேச்சுக்கு எல்லாம் ஒரு குறைச்சலும் இல்லை... இந்த முப்பத்தி நாலு வருஷத்தில் எத்தனை தடவை எனக்காக ஒரு இரண்டு நாள் ஸ்பென்ட் செய்திருக்கீங்க சொல்லுங்க?”