அந்த வீட்டில் இருந்த மூன்று ஆண்களில், அதிக நேரம் வீட்டில் செல்பிடுபவன் விவேக் தான். ஆனால் இப்பொழுது எல்லாம் அவன் வீட்டில் செலவிடும் நேரம் பெரிதும் குறைந்து போயிருந்தது. அதே போல் எப்பொழுதும் இரவு உணவிற்கு முதலில் ஆஜர் ஆவது அவன் தான். ஆனால் இப்போதெல்லாம் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உணவு உண்ணும் அந்த இரவு நேரத்தில் அவனை காண்பதே அரிதாகி போயிருந்தது.
விவேக் பாரதியிடம் நடந்துக் கொள்ளும் விதத்தில் தோன்றி இருந்த மாற்றமும் மற்றவர்கள் கண்களுக்கு தெரிந்ததோ இல்லையோ, கற்பகத்திற்கும், உமாவிற்கும் தெரிந்தது. வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றப் போதும், பாரதியின் முகத்தில் இருந்த குழப்பமும் அவர்களின் கண்களை தப்பவில்லை. கற்பகம் அதை கண்டும் காணாமல் இருந்தாள். பாரதி அவ்வளவு எளிதில் எதையும் பகிர்ந்துக் கொள்பவள் இல்லை என்பதால் உமாவும் அமைதியாக இருந்தாள். ஆனால் பாரதிக்கு வித்தியாசம் தெரியாத வண்ணம் அவளிடம் சற்று கூடுதலாகவே அக்கறை எடுத்து கவனித்துக் கொண்டாள்.
அன்றும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தபடி, தட்டில் கோலம் வரைந்துக் கொண்டிருந்த பாரதியின் கையை மெதுவாக தட்டி,
“என்ன யோசனை பாரதி? டைம் ஆச்சு பார் சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு, பஸ் வர நேரம் ஆச்சு...” என்றாள் உமா.
“ப்ச்... எனக்கு பசியே இல்லை உமா, ஏதோ நீங்க கூப்பிட்டீங்களேன்னு தான் வந்தேன்...” என்றாள் பாரதி அலுப்புடன்!
“அது சரி! உமா, உனக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை? பசிக்குறவங்க சாப்பிட போறாங்க. அப்புறம் நீ சொல்லி சாப்பிட்டு தான் ஒத்துக்கலைன்னு கம்ப்ளெயின்ட் வந்தாலும் வரும்...”
கொஞ்சம் குத்தலாக பேசிய கற்பகத்தை நேராகப் பார்த்தாள் பாரதி.