“சாரிம்மா... இந்த அளவிற்கு உன்னை ஃபீல் செய்ய விட்டது என் தப்பு தான்... இனிமேல் நிரஞ்சன், விவேக் கிட்ட எல்லாம் பொறுப்பையும் கொடுத்துட்டு, உன்னோடு டைம் ஸ்பென்ட் செய்றேன்...”
பாரதியை தவிர மற்ற மூவரும் அவர்களின் பேச்சை ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்தனர்.
“சூப்பர் அப்பா... இப்போவே இப்படின்னா, சின்ன வயசில என்ன ரொமான்டிக் கப்பிலா இருந்திருப்பீங்க!” என்று வியந்தாள் மது.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை மது. உங்க அப்பாவுக்கு எப்போவும் பிஸ்னஸ் தான் முதல் மனைவி,” என்றாள் கற்பகம்!
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை...”
மற்றவர்கள் இந்த பேச்சில் கலந்துக் கொண்டு கலகலத்துக் கொண்டிருக்க, பாரதியின் மனதில், நிரஞ்சனும், கற்பகமும் சொன்ன ‘விவேக் சொன்ன’ என்ற பகுதி மட்டும் உறுத்திக் கொண்டிருந்தது. அவள் ஃபோனில் அழைக்கும் போதெல்லாம் பிசியாக இருப்பவன், அவளுடன் காலையில் பேச ஐந்து நிமிடம் கூட செலவிட முடியாதவன், இரவில் அவளை பார்த்தாலே எரிந்து விழுபவனால், எப்படி பெற்றோரின் திருமண நாளை நினைவில் வைத்து, அதை கொண்டாடுவதை பற்றி எல்லாம் மட்டும் திட்டமிட முடிகிறது?
விவேக் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பு சரி... ஆனால், அவர்களும் அவளை போல் அவனை இங்கே வீட்டில் ஒரு சில நிமிடங்கள் தானே சந்திக்கிறார்கள்? ஒருவேளை ஆஃபிஸில் இதைப் பற்றி பேசி இருப்பார்களோ?
இதுவரை அவள் மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்த சப்பைக் கட்டு காரணங்கள் காற்றில் கரைந்துப் போக, கணவன் தன்னை மட்டும் தவிர்க்கிறானோ என்ற எண்ணம் முதல் முதலாக பாரதியின் மனதில் எழுந்தது.