வீட்டிற்கு வந்த காவேரியோ தான் வேலாயுதத்தை சந்தித்தது முதல் திரும்பி வந்தவரை அனைத்தையும் சொல்லிவிட்டு
”வியாபாரத்தில அதீத லாபம்கூட பிரச்சனையை இழுத்துக்கிட்டு வரும், உனக்கே எல்லா வியாபாரிகளும் உதவி செய்தா பாவம் மத்த விவசாயிகளோட நிலைமை என்னாகிறது, அதைப்பத்தி யோசிக்காம நீ பாட்டுக்கு பணத்தை வாங்கிட்டு வர்ற, எப்பவுமே உன்னை மட்டும்தான் யோசிப்பியா, மத்தவங்களை பத்தி உனக்கு கவலையில்லைல்ல நீ சந்தோஷமா இருந்தா போதும் அதானே”
“நான் இந்தளவுக்கு யோசிக்கலை அந்நேரம் வேலை முடிஞ்சதா பணம் வந்ததா அவ்ளோதான் யோசிச்சேன்”
”இப்படி சுயநலமா இருக்காத கொம்பா அது உனக்கும் நல்லதில்லை, நீ விரும்பற இந்த ஊருக்கும் நல்லதில்லை, நீ இந்த ஊருக்கு ஓராயிரம் நல்லது செய்திருக்கலாம், அதனால உன்னை எல்லாரும் தூக்கி வைச்சி பேசறாங்க, அதே சமயம் அவங்களுக்கு நஷ்டத்தை தந்திடாத, நீ விவசாயி மட்டுமில்லை வியாபாரியும் கூட, ஒரு சிறந்த வியாபாரி மத்த வியாபாரிக்கு கஷ்டத்தை தராம பார்த்துக்கனும் புரியுதா” என சொல்ல அவனும் சரியென ஒப்புக் கொண்டான்.
அதற்கடுத்து வந்த நாட்கள் கொம்பனுக்கு கஷ்டமாக இருந்தாலும் ஒரு முடிவோடு காவேரியின் முன் நின்று ஜெயிக்க வேண்டும் என்ற உறுதியில் அவனும் கஷ்டப்பட்டான், நாள் போக போக அவனுக்கு அந்த வேலைகள் பழகிவிட்டது. ஒரு மாதம் முடிந்து அடுத்த மாதம் வரவும் முந்தைய மாத வரவு செலவு கணக்குகளை அவனாகவே காவேரியிடம் தர அவளும் சரிபார்த்து அவனுக்கு கட்டுக்கட்டாக பணம் தந்தாள்
”வீட்டு செலவுக்கும் உனக்கும் சேர்த்து பணம் தந்திருக்கேன், சிக்கனமா செலவு செய்துக்க அப்புறம் உன்னோட சம்பளம் தரேன், அதை நீ உன் நண்பனுக்கும் உன் நாய்க்கும் செலவு செய்துக்க” என சொல்லி அவனுக்கென சம்பளத்தை தந்தாள்.