மற்ற நாட்களை போல அன்றும் அவர்களின் உணவு விடுதியில் நேரம் பரபரப்பாக சென்றது.
எட்டு மணிக்கு வேலை செய்யும் முருகனும், டேவிட்டும் வந்து விட, அடஹ்ர்கு மேல் வேலை சாதாரணமாகவே நடந்தது.
“முருகா, இந்த சின்ன பசங்களுக்கு ஐஸ் க்ரீம் எடுத்து கொடு. அதை பில்லுல போட வேண்டாம்!”
முருகனிடம் வெற்றி சொன்னது நிலா, ராஜம்மாள், மிருதுளாவிற்கும் கேட்டது.
“இப்படியே போனால் அதோ கதி தான்,” என்றாள் நிலா.
“இரண்டு ஐஸ்க்ரீம்ல என்ன ஆகப் போகுது?” என கணவனுக்கு சப்போர்ட் செய்தாள் மிருதுளா.
“நீங்களும் இப்படியே சொன்னால் எப்படி? உங்க கணக்குப் படி பார்த்தா, வெறும் ஐஸ்க்ரீம் விக்குறவங்க எல்லாம் அப்புறம் எப்படி பிழைப்பாங்க?”
“விடு நிலா...!”
“இல்லை! இங்கே பாருங்க அந்த குடும்பத்தைப் பார்த்தால் கஷ்டப் படுறவங்க போலவா இருக்கு? கார்ல் டூர் வந்திருக்காங்க. இவங்களுக்கு ஃப்ரீயா கொடுத்து என்ன கிடைக்கப் போகுது? ஏதோ மத்த ஊரு மாதிரினா கூட திரும்ப வருவாங்க, அதுக்காக கொடுக்குறதுன்னு நினைக்கலாம். இவங்க எல்லாம் அந்த பக்கம் போன உடனேயே நம்மளை மறந்து போயிடுவாங்க... டூருக்காக வரவங்க...”
“அப்படி சொல்லும்மா...” என்றாள் ராஜம்மாள்!
“இங்கே பாருங்க மிருதுளா. நம்ம ஹோட்டலுக்கு கூட்டம் வந்தாலும் வரவும் செலவும் சரியா தான் இருக்கு... பெருசா லாபம்ன்னு எதுவும் வரலை... இது கூட இப்படியே நீங்க இரண்டுப் பேரும் ரொம்ப ஓவர் நல்லவங்களா இருந்தா, ஒன்னுமே செய்ய முடியாது.