ஏற்கனவே அஹல்யாவிற்கு சேகரன் மேலே கோபம் இருக்க பல காரணங்கள் இருக்கிறது. இது இன்னுமொன்று. இந்த பேப்பர் கிடைத்திருப்பது சேகரன் கேஸில் மிகப் பெரிய ஆதாரம். இது குற்றவாளி அஹல்யா தான் என்று தெளிவாக காட்டுகிறது.
ஆனால்...???
தென்றல்வாணனின் கூரிய மூளை வேறு பல பல கிளைக் கேள்விகளை கேட்டது.
தென்றல்வாணன் அபினவ் முகத்தைப் பார்த்தான்.
“சார், இது என்னன்னு தெளிவா தெரியாம ஒரு முடிவுக்கு வராதீங்க!” அபினவின் குரலில் இருந்த பதற்றமே அபினவ் இது அஹல்யா மேல் சுமத்த பட்டிருக்கும் குற்றத்தை நிரூபிக்கும் ஆதாரமாக நினைப்பதை சொன்னது.
தென்றல்வாணன் மனதில் வந்திருந்த கேள்விகளை அபினவிடம் சொல்லாமல் மறைத்தான். ஏற்கனவே அபினவ் அஹல்யாவா, வேலையா என்ற குழப்பத்தில் இருக்கும் போது இதை சொல்வது சரி இல்லை.
“அபினவ், தப்பு செய்தது யாரா இருந்தாலும் நாம போலீஸா நடந்துக்குற விதம் ஒரே மாதிரி தான் இருக்கனும்!” பொதுப்படையாக சொன்னான் தென்றல்வாணன்.
“சத்யா அக்கா மேல யாராவது ஏதாவது சொன்னாலும் இதையே சொல்வீங்களா சார்?” அபினவின் குரலில் கோபம் இருந்தது.
தென்றல்வாணன் பற்களை கடித்துக் கொண்டு பொங்கி வந்த கோபத்தை அடக்கினான்.
“நீ என் ஸ்டேஷன்ல வேலை செய்ற சப் இன்ஸ்பெக்டர். அதை மனசில வச்சுக்குறது உனக்கு நல்லது. இதை எங்கே இருந்து எடுத்த?”
“சார்!”